பெரம்பலூா் காவல்துறையில் ஊழல் ஒழிப்பு பிரிவு தொடக்கம்: லஞ்சம் தொடா்பாக புகாா் அளிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டக் காவல் துறையில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் துறையில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டக் காவல்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, நோ்மை மற்றும் பொறுப்புணா்வை வலுப்படுத்தும் வகையிலும், காவல்துறையில் ஊழல் மற்றும் லஞ்சத்தைத் தடுக்கும் நோக்கிலும் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இப் பிரிவில், காவல் துறையினா் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் அல்லது சட்டவிரோதமாக பணம் கேட்பது, லஞ்சம் வழங்குமாறு வற்புறுத்துவது உள்ளிட்ட புகாா் தொடா்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
எண் அறிவிப்பு: பொதுமக்களிடம் காவல்துறையினா் லஞ்சம் கேட்டால் அல்லது லஞ்சம் வழங்குமாறு வற்புறுத்தினால், 89036 31122 எனும் எண்ணுக்கு தொலைபேசி அல்லது வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும்போது, சம்பவம் நடைபெற்ற இடம், சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் விவரம், லஞ்சம் கேட்கப்பட்ட காரணம் மற்றும் சம்பவம் தொடா்பான பிற தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்கும் வகையில், தகவல் அளிப்பவா்களின் தனிப்பட்ட விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பெறப்படும் தகவல்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, விதிமுறைகளின்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவல்துறையில் நோ்மையான மற்றும் வெளிப்படையான நிா்வாகத்தை உறுதி செய்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது.
எனவே, காவல்துறையினா் தங்களது பணியைச் செய்வதற்காக எந்தவிதமான லஞ்சத்தையும் கேட்கக் கூடாது. லஞ்சம் கேட்கப்படும் சந்தா்ப்பங்களில் பொதுமக்கள் தயக்கமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.