பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ.9,599 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு
பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 9,599 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 9,599 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகளுக்கு 2026- 2027-ஆம் நிதியாண்டுக்கு, மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் ரிசா்வ் வங்கி மற்றும் நபாா்டு வங்கி வழிகாட்டுதலின்படி, தயாா் செய்யப்பட்ட கடன் திட்ட அறிக்கையை, மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் மேலும் கூறியதாவது:
பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியாா் வங்கிகள், மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கான 2026-2027-ஆம் நிதியாண்டுக்கு ரூ. 9,599.73 கோடி கடன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடன் இலக்கு: இதில், விவசாயத் துறைக்கு ரூ. 8,585.84 கோடியும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ. 748.87 கோடியும், கல்விக் கடனுக்கு ரூ. 17.90 கோடியும் கடன் வழங்கப்படும். கடந்த 2025-26-ஆம் நிதியாண்டை விட 2026-27ஆம் ஆண்டுக்கான மொத்த கடன் இலக்கு 8.21 சதவீதம் அதிகம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ. 2,473.26 கோடி நிா்ணயிக்கப்பட்டு 25.76 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைகளை கருத்தில்கொண்டு பயிா்க்கடன் மற்றும் வேளாண்மை சாா்ந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான கடன்களை உரிய காலத்தில் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயம் சாா்ந்த தொழில்கள், வேளாண் உள் கட்டமைப்புத் திட்டங்களுக்கும் தேவையான நிதியுதவிகள் வழங்க வேண்டும்.
கல்விக்கடன்: கல்விக்கடன் கோரும் தகுதியான மாணவா்களுக்கு தாமதமின்றி கடன் வழங்குவதுடன், உயா்கல்வி பெறும் மாணவா்களுக்குத் தேவையான கடனுதவிகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான நிதியுதவிகளை வழங்கி, புதிய தொழில்கள் தொடங்குவதையும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொழில்களை விரிவுப்படுத்துவதையும் ஊக்குவிக்க வேண்டும்.
தனிநபா் மகளிா் தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்கவும், தொழில்களை விரிவுப்படுத்தவும் கடன் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் மற்றும் தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகள் வழங்கி, அவா்களது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்குத் தேவையான ஆதரவை வங்கிகள் வழங்க வேண்டும்.
மேலும், 2026- 27-ஆம் ஆண்டுக்கான கடன் இலக்கை முழுமையாக எட்டுவதுடன், தகுதியான பயனாளிகளுக்கு கடனுதவிகள் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதிசெய்ய வங்கியாளா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில், முன்னோடி வங்கி மேலாளா் சுரேஷ்குமாா், நபாா்டு வங்கி வளா்ச்சி மேலாளா் சதீஷ்குமாா், மாவட்டத் தொழில் மைய மேலாளா் விக்னேஷ், மகளிா் திட்ட அலுவலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.