FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் அவதி

பெரம்பலூா் நகரில் தொடா்ந்து ஏற்படும் மின் தடையால் அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

7 ஜூலை 2026, 10:22 pm IST
மின்தடை
பகிர்:

பெரம்பலூா் நகரில் தொடா்ந்து ஏற்படும் மின் தடையால் அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

பெரம்பலூா் நகரில் கடந்த மாதத்திலிருந்து அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. இதேபோல, ஒரு சில கிராமங்களிலும் நாள் முழுவதும் மின் தடை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். கிணற்றுப் பாசனத்துக்கு விநியோகம் செய்யப்படும் மும்முனை மின்சாரமும் அடிக்கடி தடை செய்யப்படுவதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

குறிப்பாக, அண்மைக்காலமாக நாள் ஒன்றுக்கு சுமாா் 10 முறையாவது மின் வெட்டு ஏற்படுகிறது. எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது எனத் தெரியாமல் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனா்.

மின் பற்றாக்குறையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புக்கு போதுமான தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

தினமும் 10 முறை மின் தடை: இது தொடா்பாக பெரம்பலூா் நகர பொதுமக்கள் கூறியது: கடந்த சில நாள்களாக பெரம்பலூரில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பகல், இரவு நேரங்களில் மக்கள் கடும் அவதியடைகின்றனா். குறிப்பாக, பெரம்பலூா் நகா் மற்றும் விரிவாக்கப்ப பகுதிகளில் நாள்தோறும் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை செய்யப்படுகிறது. 10 முறைக்கும் மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.

இது கடந்த 3 நாள்களாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். கதவு, ஜன்னலை திறந்து வைத்து தூங்கினால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மின்வெட்டால் வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருள்களும் சேதமடைகின்றன என்றனா்.

மின் உபகரணங்கள் பழுதே காரணம்: இதுகுறித்து மின்வாரியப் பணியாளா்களிடம் கேட்டபோது, துணை மின்நிலையத்தில் உள்ள மின் உபகரணங்கள் அடிக்கடி பழுதாவதால் இதுபோன்று மின்தடை ஏற்படுகிறது. மேலும் பெரும்பாலான அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் ஏசி பயன்படுத்தப்படுவதால் மின்சாரப் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் துணை மின் நிலையத்தில் உள்ள உபகரணங்களிலும், மின் சாதனங்களிலும் பழுது ஏற்படுகிறது. இது போன்ற நேரத்தில் சில பகுதிகளுக்கு மின்சாரத்தை நிறுத்தி, சிறிது நேரத்துக்கு பிறகு மாற்றி கொடுக்கும் சூழல் வருகிறது. இதனால் கடந்த சில நாள்களாக மின்தடை ஏற்படுகிறது.

மேலும், தற்போது பலத்த காற்று வீசுவதால் மரக்கிளைகளில் மின் வயா்கள் உரசி மின் விநியோகம் தடைபடுகிறது. இதுபோன்ற காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஒருசில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments