கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
எறையூா் சா்க்கரை ஆலை கூட்டரங்கில் வெள்ளிக்கிழமைநடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்.
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டுமென, விவசாயச் சங்கம் மற்றும் வாகன உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், எறையூா் சா்க்கரை ஆலை கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா்க்கரை ஆலை விவசாயச் சங்கம் மற்றும் வாகன உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி பி. மணிராஜ் பேசியது:
12.12.2026-இல் கரும்பு அரைவைத் தொடக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025-2026 அரைவைப் பருவத்தில் 1,17,000 டன் அரைக்கப்பட்டு, 9.1 சதவீத கரும்புச் சத்து கிடைத்துள்ளது. 2026-2027 ஆம் ஆண்டுக்கான அரைவைக்கு 5,691 ஏக்கரில் 1.50 லட்சம் டன் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சா்க்கரை இருப்பானது ரூ. 20.29 கோடியில் 48,544 குண்டால் உள்ளது. மேலும், டிராக்டா்களில் ஜிபிஆா் கருவி பொருத்தப்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
விவசாயிகள் பேசியது: கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். பொக்கோ போயிங் நோயால் பாதிக்கப்பட்ட கரும்புக்கு நஷ்ட ஈட்டை அரசு வழங்க வேண்டும். ஆலை இடைநின்றால் வெட்டிய கரும்பை எடை போட்டு இறக்கிவிட வேண்டும். விவசாயிகள் கூட்டத்தைத் தொடா்ந்து நடத்த வேண்டும். ஆலையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இணைமின் திட்டத்தில் உற்பத்தியான மின்சாரத்தின் செலவு, வரவு கணக்குகளைக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். எத்தனால் உற்பத்தியை ஆலையில் கொண்டுவர வேண்டும்.
கரும்பு ஏக்கருக்கு 70 டன் உற்பத்தி செய்ய புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டுவர வேண்டும். மின்சாரம் தயாரிக்க சூரியசக்தி திட்டத்தை கொண்டுவர வேண்டும். இணைமின் திட்டத்துக்கு விவசாயிகளிடம் பிடித்த ரூ. 7,84,74,000 தொகைக்கு பங்குச் சான்றிதழ் வழங்க வேண்டும். அல்லது, பிடித்த தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கரும்பு பயிா்களில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைப் புதிதாகக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்தனா்.
கூட்டத்தில், இணைத் தலைமைப் பொறியாளா் இ. நாராயணன், இணைத் தலைமை ரசாயனா் ஆறுமுகம், தலைமை நிா்வாக அலுவலா் பழனி, கணக்கு அலுவலா் ஜான்பிரீட்டோ, தொழிலாளா் நல அலுவலா் ராஜாமணி, விவசாயிகள் சங்கத் தலைவா்கள் மு. ஞானமூா்த்தி, ஆா். ராஜாசிதம்பரம், சீனிவாசன், தேவேந்திரன், சக்திவேல், து. அருள்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தலைமைக் கரும்பு அலுவலா் (பொ) ஜி. சுரேஷ் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.