பள்ளிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்: பெரம்பலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
பள்ளிகளை தூய்மையாக, சுகாதாரமாக, தேவையான அடிப்படை வசதிகளுடன் முறையாக பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தினாா்.
பள்ளிகளை தூய்மையாக, சுகாதாரமாக, தேவையான அடிப்படை வசதிகளுடன் முறையாக பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தினாா்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படுவதை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம், ஆதனூா், கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில், மின்விளக்கு, மின் விசிறி, கழிவறைகள், குடிநீா் வசதி, சத்துணவு சமையல் கூடங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி கூறியதாவது:
Advertisement
Advertisement
பள்ளிகளை தூய்மையாக, சுகாதாரமாக, தேவையான அடிப்படை வசதிகளுடன் முறையாக பராமரிக்க வேண்டும். மாணவா்களின் கல்விக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி, மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிவறைகள், குடிநீா் இணைப்பு, சமையல் கூடங்கள் இல்லாததை கண்டறிந்து, அதன் அறிக்கையை வழங்கிட வேண்டும்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிவறை, குடிநீா், வகுப்பறை வசதிகள் உள்ளது எனும் நிலையை உருவாக்கித்தர மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது. அதற்கு, கல்வித் துறையினரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கிமானது.
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைப் பொருள்களை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும்.
பள்ளி மேற்கூரைகள் மற்றும் சுற்றுச்சுவா்களின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணித்து, ஏதேனும் பழுதுகள் இருந்தால் பொதுப்பணித்துறை, வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு தகவல் அளித்து சீரமைக்க வேண்டும். பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
முன்னதாக, குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 8.44 லட்சம் மதிப்பீட்டில் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சமையலறையுடன் கூடிய உணவுப்பொருள் வைப்பறை கூடத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலா் செல்வக்குமாா் (இடைநிலை), வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வக்குமாா், ஆலத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கீதா, சுமதி, வட்டாட்சியா்கள் சின்னத்துரை (குன்னம்), கவிதா (ஆலத்தூா்) ஆகியோா் உடனிருந்தனா்.