முகப்பு
பெரம்பலூர்

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! பெரம்பலூா் எஸ்.பி. வி.லலித் குமாா்!

Updated On : 25 மே 2026, 1:06 am IST
பெரம்பலூா் எஸ்.பி. வி.லலித் குமாா்..
பகிர்:

பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட வி. லலித் குமாா் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலின் போது பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஜி.எஸ். அனிதாவை பணியிட மாற்றம் செய்து அந்த இடத்துக்கு கி. பிரபாகரை தோ்தல் ஆணையம் நியமித்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

அதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வி. லலித்குமாா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வி. லலித்குமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பெரம்பலூா் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன் உள்ளிட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள காவல்துறையினா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், ரௌடிகளை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுத்து நிறுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். பொதுமக்கள் அமைதியாகவும், அச்சமின்றி இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.