காவிரி நீர் விவகாரத்தில் பொதுப் பணித் துறை தோல்வி அடைந்து விட்டது
தமிழகத்தில் காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் வசம் உள்ள பொதுப்பணித் துறை தோல்வி அடைந்துவிட்டது என்றார் இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்.
தமிழகத்தில் காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் வசம் உள்ள பொதுப்பணித் துறை தோல்வி அடைந்துவிட்டது என்றார் இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்.
புதுக்கோட்டையில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது:
திமுக தலைவராக மு.க. ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க. ஸ்டாலின் குடும்ப அரசியலால் தான் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்று அதிமுகவினர் கூறுவது ஏற்புடையதல்ல.
கருணாநிதி 15 வயதில் அரசியலுக்கு வந்தார். ஆனால், ஸ்டாலினோ 14 வயதிலே அரசியலுக்கு வந்தவர். எதிர்காலத்தில் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் என்பதைப் பற்றி தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் ஆற்றிய உரை தெளிவுபடுத்துகிறது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தில் காவிரி நீர் கரைபுரண்டு சுமார் 100 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. மறுபுறம் கடைமடைக்கு தண்ணீர் வேண்டுமென விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு நிதி மோசடியும், பொதுப்பணித் துறை அலுவலர்களின் அலட்சியமுமே காரணம். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வசம் உள்ள பொதுப்பணித் துறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் அமர்ந்திருப்போரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது ஏற்புடையது. ஆனால், அதை கட்டாயமாக்க கால அவகாசம் அளிக்க வேண்டும். அரசியல் பாகுபாடு காட்டாமல் கேரள மக்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி அளிக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அதிமுக அரசின் நோக்கம். இக்கட்சியினருக்கு தோல்வி பயம் இருப்பதால் இந்த ஆட்சி இருக்கும் வரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலே நடைபெறாது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.