திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயிலில் பரமபதவாசல்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளைத் தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நடைபெற்ற வைகுந்த ஏகாதசி திருவிழாவில் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பையொட்டி, அதிகாலை 3 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், திருப்பாவை சேவை காலமும் நடைபெற்றது. தொடர்ந்து அனந்தசயன அலங்காரமும், விஸ்வரூபத் தரிசனமும் நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சத்தியமூர்த்தி பெருமாளுக்கு தொடர்ந்து பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்ற 18 வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சத்தியமூர்த்தி பெருமாளை பரமபதவாசலுக்கு அருகே பக்தர்கள் கொண்டு வந்தனர். காலை 5.30 மணிக்கு சத்தியமூர்த்தி பெருமாள் ஆழ்வாருக்கு மோட்சம் கொடுக்க, பக்தர்களின் கோவிந்தா கோவிந்தம் முழக்கத்துடன் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
பின்னர் மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சத்தியமூர்த்தி பெருமாளை பக்தர்கள் பல்லக்கில் பரமபதவாசல் வழியாக தூக்கிச் சென்றனர். தொடர்ந்து பெருமாள் புஷ்ப ஊரணி வழியாக வசந்த மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பரமபதவாசல் திறப்பில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், திருமயம், புதுக்கோட்டை, நமணசமுத்திரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பரமபதவாசல் திறப்பில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரமபதவாசல் திறப்பில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் நடைபெற்ற வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி திங்கள்கிழமை உற்சவருக்கு திருமஞ்சனம், திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பரமபதவாசல் வழியாகச் சென்ற பக்தர்கள் அழகப்பெருமாளைத் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுதர்சன ஹோமம், பாராயணங்களுக்குப் பிறகு உற்சவமூர்த்திகளின் திருவீதியுலா இரவு நடைபெற்றது. பரமபதவாசல் திறப்பு நிகழ்வில், பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.எம்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபோல, வேகுப்பட்டி கல்யாண வெங்கடேசுவரர் கோயில், காரையூர் பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் நடைபெற்ற வைகுந்த ஏகாதசி விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். உலகம்பட்டி ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் நடைபெற்ற வைகுந்த ஏகாதசி விழாவில் கரூர் திருக்குறள் பேரவைத் தலைவர் மேலை.பழநியப்பனின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.