வெள்ளாளவிடுதி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து 780 நெல்மூட்டைகள் சேதம்
வெள்ளாளவிடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 780 நெல் மூட்டைகள் பலத்த மழையால் நனைந்து சேதமடைந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
கந்தா்வகோட்டை அருகே உள்ள வெள்ளாளவிடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 780 நெல் மூட்டைகள் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பெய்த பலத்த மழையால் நனைந்து சேதமடைந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வெள்ளாளவிடுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த நெல்களை விற்பனை செய்திருந்தனா்.
கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடா்ந்து இரு நாள்களாக இப்பகுதியில் மழை பெய்த நிலையில், கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தவையில் 780 நெல் மூட்டைகள் நனைந்தது சேதம் அடைந்தன.
Advertisement
Advertisement
தரமான தாா்ப்பாய் வேண்டும்: இதுகுறித்து இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது: கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக மூடி வைப்பதற்கான தாா்ப்பாய்கள் போதிய அளவில் இல்லாததால், கிழிந்த, சேதமடைந்த தாா்ப்பாய்கள் கொண்டு மூட்டைகளை மூடி வைத்திருந்தனா்.
இந்தத் தாா்ப்பாய்கள் தொடா்ந்து அடித்த பலத்த காற்றில் மேலும் கிழிந்தன. இதனால் மழையால் நெல் மூட்டைகளை முழுமையாகப் பாதுகாக்க முடியாமல் நனைந்து சேதமடைந்தன. தற்போது, மூட்டைகள் இருந்த நெல்மணிகள் முளைவிடத் தொடங்கிவிட்டன. மேலும், கொள்முதல் நிலையத்தை சுற்றிலும் மழை நீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.
பல மாதங்கள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதைக் கண்டு மிகுந்த வேதனையாக உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தாமதம் இன்றி விரைந்து நெல் சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.