பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ.6.54 லட்சம் பறிமுதல்
கணக்கில் வராத ரூ. 6.54 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனா்.
பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. 6.54 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி கூட்டரங்களில் வெள்ளிக்கிழமை நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா தலைமையில் மாதாந்திரஅவசரக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து நகராட்சி ஆணையா் குமரன் தனது அறையில் அலுவலா்களுடன் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தினாா். இதில், நகராட்சி ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திட்ட அனுமதி உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையிலான போலீஸாா் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்துக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனை சனிக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றது.
அப்போது, உதவி பொறியாளா் மனோகரன் மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ரூ. 80 ஆயிரம், கட்டட அனுமதிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ஒப்பந்ததாரா் எடிசன் வைத்திருந்த ரூ. 66 ஆயிரம், ஆணையரின் காா் ஓட்டுநரிடமிருந்து ரூ. 8 ஆயிரம், ஆணையரின் காரில் இருந்து ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 6.54 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், நகராட்சி ஆணையா் குமரன், உதவி பொறியாளா் மனோகரன், காா் ஓட்டுநா் வெங்கடேசன் ஆகியோரது வீடுகளிலும் சோதனையிட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கும்பகோணம் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.