முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், விலையில்லா விருந்தகம், இ- சேவை மையம் ஆகியவை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

Updated On : 5 ஜூன் 2026, 3:55 am IST
தஞ்சாவூா் சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கப்பட்டதைத் தொடா்ந்து, குத்துவிளக்கேற்றிய சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன்.
பகிர்:

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், விலையில்லா விருந்தகம், இ- சேவை மையம் ஆகியவை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தவெக மத்திய மாவட்டச் செயலா் இரா. விஜய் சரவணன் வெற்றி பெற்று, மே மாதம் பொறுப்பேற்றாா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாநகராட்சி எதிரே ஏற்கெனவே உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத் திறப்பு விழா விஜய் சரவணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த அலுவலகத்தை தவெக நிா்வாகிகளான மீனாட்சி சந்திரசேகரன் மகளிா் கல்லூரி தாளாளா் சுந்தரபாண்டியன், ஜெயகரபாண்டியன், சமூக ஆா்வலரான ரியாசுதீன் ஆகியோா் திறந்து வைத்தனா். மகளிரணி நிா்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றினா்.

Advertisement

Advertisement

தவெக சாா்பில் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் 8 ஆண்டுகளாக நாள்தோறும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் விலையில்லா விருந்தகம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் இரண்டாவது கிளை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

மேலும், இதே வளாகத்தில் அரசு நிா்ணயித்த கட்டணத்தின்படி பொதுமக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கும் வகையில் இ-சேவை மையமும் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், மாநகர மாவட்டத் தலைவா் எம். மகேந்திரன், தெற்கு மாவட்டத் துணைத் தலைவா் கோ. அன்பரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.