அம்மா இருசக்கர வாகனத் திட்டம் பெண்களுக்கான வரப்பிரசாதம்
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றார் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றார் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.
ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், 198 உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம், 69 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடன், 600 பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் கடன் என ரூ.4.09 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் மேலும் பேசியது
உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை யாரும் நிறுத்த முடியாது. அவை முழுக்க முழுக்க மக்களுக்கான திட்டங்களாகும்.
காவல்துறை, சுகாதாரம், சுற்றுலா, கல்வி, வேளாண் என 32 துறைகளில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் மகளிருக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றார் அமைச்சர் நடராஜன்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி பேசியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் இத்தொகுதியில் மட்டும் ரூ.4,000 கோடிக்கு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் இரு சக்கர வாகனம் கேட்டு 6,676 விண்ணப்பங்களும், நகர்ப்புறங்களில் 7,610 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இதில் 3,353 பேருக்கு வாகனங்கள் வாங்கிட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் ப.குமார், மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட அலுவலர் பாபு, குடும்ப நலத்துறை இணை இயக்குநர் சம்சாத் பேகம், மகளிர் திட்ட உதவித் திட்ட அலுவலர்கள் முருகதாஸ், சாந்தி, ஜெயராமன், அமுதா, விஜயசங்கரி, மாநகராட்சி உதவி ஆணையர்கள் ஷேக் அய்யூப், எம்.தயாநிதி, சி. பிரபாகரன், டி.எஸ். துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.