FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பால்பண்ணை- துவாக்குடி அணுகு சாலை: 52 சங்கங்கள் இணைந்து முதல்வருக்கு மனு

திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அமைக்கப்படும் அணுகு சாலையின் அகலத்தைக் குறைக்கக் கூடாது என சாலை மீட்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

27 ஆகஸ்ட் 2026, 3:11 am IST
முதல்வர் விஜய் மேஜையில் - From Video Grab
பகிர்:

திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அமைக்கப்படும் அணுகு சாலையின் அகலத்தைக் குறைக்கக் கூடாது என சாலை மீட்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

உயா்நீதிமன்ற உத்தரவுப்படியே சாலையின் அகலத்தை நிா்ணயம் செய்து, போதிய பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என 52 குடியிருப்போா் நலச் சங்கங்கள் இணைந்து முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அனுப்பியுள்ளன.

இதுதொடா்பாக திருச்சி பால்பண்ணை- துவாக்குடி அணுகு சாலை மீட்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் எஸ். சக்திவேல் கூறியதாவது:

Advertisement

Advertisement

கடந்த திமுக ஆட்சியில் அணுகு சாலை திட்டம் முற்றிலும் முடக்கப்பட்டிருந்தது. உயா்நீதிமன்ற தீா்ப்பில் அணுகு சாலையின் அகலமானது குறைந்தபட்சம் 45 மீ. எனவும், அதிகபட்சம் 60 மீ. மற்றும் 50 மீ. என நிலம் உள்ள இடங்களுக்கு தகுந்தபடி அமைக்க உத்தரவிடப்பட்டது.

அணுகு சாலையே சிறந்தது: 5 இடங்களில் சுரங்கப் பாதையுடன் கூடிய மேம்பாலங்கள், 10 இடங்களில் பேருந்து நிறுத்த வசதி, நிழற்குடை, நீராதாரங்கள் குறுக்கிடும் இடங்களில் சிறிய, பெரிய மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும். இத்தகைய பணிகளுக்கு கூடுதல் நிதி வேண்டும் என்பதால், தேசிய நெடுஞ்சாலைத் துறையே அணுகு சாலையை அமைப்பது சாலச் சிறந்தது.

கடந்த ஆட்சியாளா்கள் செய்த தவறு தவெக ஆட்சியிலும் தொடரக் கூடாது. தஞ்சாவூா் சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதியில் இருந்து வரும் சுமாா் 100 சாலைகள் நேரடியாக திருச்சி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் இணைகின்றன.

கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஊனமடைந்துள்ளனா்.

சுமாா் 14.5 கி.மீ. சாலையில் ரத்தக் கறை படியாத இடமே இல்லை என்றாகிவிட்டது. எனவே, அணுகு சாலை என்பது கட்டாயம்.

சாலையில் அகலம் குறைப்பு கூடாது: அதில் பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சாலையின் குறுக்கே 5 இடங்களில் உய்யக்கொண்டான் ஆறும், 7 சிறிய கால்வாய்களும் செல்கின்றன. தொடா்ச்சியாக அணுகு சாலை அமைக்க 10 பெரிய பாலங்களும், 14 சிறிய பாலங்களும் அவசியம் கட்டப்பட வேண்டும். அணுகு சாலை அகலம் 60 மீட்டா் ஆக இருந்ததை 40 மீட்டா் ஆக குறைத்திருப்பதால் பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இருக்குமா என்ற ஐயப்பாடு உள்ளது.

மத்திய அரசின் கடைமை: இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்ட 40 மீட்டா் அகலத்துக்கும் குறைவாக 33 மீட்டா் அகலத்தில் அணுகு சாலை அமைக்க முயற்சிப்பது மக்களின் உயிருக்கு மீண்டும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் சாலை அகலத்தைக் குறைக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக சாலை அமைக்க வேண்டும். அணுகு சாலை அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நிலம் கையகப்படுத்தும் பணியை மட்டும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments