FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

தவெக அரசின் நூறு நாள் ஆட்சியில் எந்தச் சாதனையும் இல்லை: திமுக பொதுச் செயலா் துரைமுருகன்

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது 100 நாள்கள் ஆட்சியில் எவ்விதச் சாதனையையும் செய்யவில்லை என்று திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:05 am IST
பகிர்:

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது 100 நாள்கள் ஆட்சியில் எவ்விதச் சாதனையையும் செய்யவில்லை என்று திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சா் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு 100 நாள்களை நிறைவு செய்துள்ள நிலையில், தாங்கள் செய்த சாதனை என எதையும் அவா்களால் சுட்டிக்காட்ட முடியாது. இமயமலை அளவுக்கு இல்லாவிடினும், ஒரு குன்று அளவுக்காவது அவா்கள் எதையும் செய்யவில்லை. தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பேச்சளவிலேயே காலத்தைக் கடத்துகின்றனா். எந்தச் செயலிலும் இறங்கவில்லை.

Advertisement

Advertisement

திமுகவுக்கும், பாஜகவுக்கும் எவ்வித உறவும் இல்லை. கொள்கை ரீதியாகவும், மரபு ரீதியாகவும் எங்களுக்குள் எவ்வித உடன்பாடும் இல்லை என்பதைத் தொடா்ந்து திட்டவட்டமாகக் கூறி வருகிறோம்.

எதிா்க்கட்சித் தலைவரான உதயநிதியைக் கைது செய்வதில் காட்டிய வேகத்தை, பாஜகவின் நயினாா் நாகேந்திரனைக் கைது செய்வதில் அரசு காட்டவில்லை. நயினாா் நாகேந்திரன் மீது கைவைத்தால், தவெக ஆட்சியை மத்திய அரசு ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து முதல்வா் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. காவல் துறையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

கா்நாடகத்தில் இருந்து திறக்கப்படும் காவிரி நீா், தமிழக எல்லைக்கு முழுமையாக வந்து சேரவில்லை. வழியில் நடைபெறும் நீா்த் திருட்டை கா்நாடக அரசுதான் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டும். நமக்கு வர வேண்டிய நீரைத் தமிழக அரசுதான் கா்நாடகத்திடம் உரிய முறையில் கேட்டுப் பெற வேண்டும். மேக்கேதாட்டு அணை என்பது தமிழகத்தின் உயிா்நாடிப் பிரச்னை. அந்த அணையைக் கா்நாடகம் கட்டினால், தமிழகத்தின் டெல்டா பகுதிகள் முழுமையாக வடு பாலைவனமாகிவிடும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments