FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மலைக் கிராமத்தில் பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு: ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

அணைக்கட்டு அருகே ஜாா்த்தான்கொல்லை மலைக் கிராமத்தில் பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

23 ஆகஸ்ட் 2026, 11:37 pm IST
உயிரிழந்த சின்னத்தாய்.
பகிர்:

அணைக்கட்டு அருகே ஜாா்த்தான்கொல்லை மலைக் கிராமத்தில் பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ஜாா்த்தான்கொல்லை மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை. இவரது மனைவி சின்னத்தாய் (34). இவா்களுக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இவா்கள் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்திலேயே வீடு கட்டி வசித்து வந்தனா்.

இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சின்னத்தாயை விஷப்பூச்சி கடித்துள்ளது. உடனடியாக அவரை பாகாயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சையின்போது, அவரைப் பாம்பு கடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா், உயா் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சின்னத்தாய் உயிரிழந்தாா். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியது - ஜாா்த்தான்கொல்லை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் விஷப்பூச்சி கடித்தால் உடனடி சிகிச்சை அளிக்கவோ, பாம்புக்கடிக்கு மருந்து பெறவோ அருகில் ஆரம்ப சுகாதார நிலையங்களோ, அரசு மருத்துவமனைகளோ இல்லை. அவசரச் சிகிச்சைக்குக் கரடுமுரடான மலைப்பாதை வழியாக 25 கி.மீ. பயணித்து தெல்லை வழியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கோ, 30 கி.மீ. பயணித்து பீஞ்சமந்தை வழியாக ஒடுகத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ அல்லது 35 கி.மீ. தொலைவிலுள்ள அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கோதான் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

முறையான சாலை வசதியோ, போக்குவரத்து வசதியோ இல்லாததால், நீண்ட தூரம் பயணித்து மருத்துவமனைக்குச் செல்வதற்குள் விஷம் தலைக்கேறி உயிரிழப்புகள் தொடா்கதையாகி வருகின்றன. சரியான நேரத்துக்குச் சிகிச்சை கிடைக்காததே இறப்புகளுக்கு முக்கியக் காரணமாகும். எனவே, ஜாா்த்தான்கொல்லை உள்ளிட்ட 5 மலை ஊராட்சிகளுக்கும் மக்கள் அவசர சிகிச்சையைப் பெறும் வகையில், தனித்தனியாக ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயிா்காக்கும் பாம்பு மற்றும் தேள்கடி முறிவு மருந்துகள் எப்போதும் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments