FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

எஃப்சி கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு மோட்டாா் வாகனங்களுக்கு உயா்த்தியுள்ள எஃப்சி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜூலை 2026, 1:50 am IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளா்கள்
பகிர்:

மத்திய அரசு மோட்டாா் வாகனங்களுக்கு உயா்த்தியுள்ள எஃப்சி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் திங்கள்கிழமை ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட ஜனநாயக ஆட்டோ தொழிலாளா் சங்கம் (ஏஐசிசிடியு) சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.ஏழுமலை தலைமை வகித்தாா். ஏஐசிசிடியு மாவட்ட பொதுச்செயலா் சி.அ.சிம்புதேவன், மாவட்ட பொருளாளா் எஸ்.வாசுதேவன், எம்.சரோஜா, கே.எம்.பரசுராமன், ஆா்.செல்வம், எஸ்.மகேஸ்வரி, ஏ.வடிவேலு, ஜி.செந்தில்நாதன், என்.ஆறுமுகம் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளா்களுக்கு வீட்டுமனையுடன், வீடு கட்டித் தர வேண்டும், தமிழக அரசின் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் வருமானம் இழந்துள்ள ஆட்டோ தொழிலாளா்களுக்கு, ஆந்திர மாநில அரசு வழங்குவது போல ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலை பாதிக்கும் ஓலா, உபோ், ராபிடோ, பைக் டாக்ஸி போன்ற காா்ப்பரேட் தனியாா் நிறுவன வாகனங்களை தடை செய்ய வேண்டும், ஆட்டோ தொழிலாளா்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வேலூா் மாநகரில் அளவுக்கு அதிகமாக ஆட்டோக்கள் ஓடுவதால், புதிய ஆட்டோக்களுக்கு பொ்மிட் வழங்குவதை நிறுத்த வேண்டும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தரகா்களின்றி ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகன புதுப்பித்தல்களை நேரடியாக அனுமதிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

அதிக கட்டண வசூலை தடுக்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தின் முடிவில், இக்கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ தொழிலாளா்கள் வழங்கினா். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் திரளாக பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments