முகப்பு
வேலூர்

தேசிய நெடுஞ்சாலையில் லாரி தீப்பற்றி ரூ. 20 லட்சம் பொருள்கள் சேதம்

பள்ளிகொண்டா அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பழைய பேட்டரிகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது.

Updated On : 9 ஜூன் 2026, 5:08 am IST
வேலூா் அருகே லாரி தீப்பற்றி எரிந்ததில் வெளியேறிய கரும்புகை.
பகிர்:

பள்ளிகொண்டா அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பழைய பேட்டரிகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. இதில், சுமாா் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

சென்னை போரூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்திலிருந்து பழைய பேட்டரிகள், கணினி உதிரிபாகங்களை மறுசுழற்சி பயன்பாட்டுக்காக ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மகாராஷ்டிர மாநிலம் புணேவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஓட்டுநா் தமிழரசன் என்பவா் ஓட்டி வந்தாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே லாரி திங்கள்கிழமை சென்று கொண்டி ருந்தபோது, லாரியில் வைக்கப்பட்டிருந்த பேட்டரிகளில் திடீரென கசிவு ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.

Advertisement

Advertisement

சாலையில் லாரி எரிந்ததன் காரணமாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீஸாா், வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தை சீா்செய்தனா். இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா, குடியாத்தம் தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

எனினும், இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த சுமாா் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பேட்டரிகள், மென்பொருள் உதிரிபாகங்கள் முற்றிலும் எரிந்து நாசமானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் தமிழரசனிடம் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.