FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வேலூா்: திருடன் என நினைத்து வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை

வேலூரில் திருடன் என நினைத்து வடமாநிலத் தொழிலாளியைப் பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 19 ஜூன் 2026, 5:40 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

வேலூரில் திருடன் என நினைத்து வடமாநிலத் தொழிலாளியைப் பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜோகிந்த் முண்டா (40). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு வேலை தேடி வேலூருக்கு வந்துள்ளாா். இங்குள்ள தனியாா் நிறுவனத்தில் அவா் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வேலூா் காகிதப்பட்டறை செல்லியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு புதன்கிழமை நள்ளிரவு அவா் மதுபோதையில் அமா்ந்திருந்துள்ளாா்.

நள்ளிரவில் மா்ம நபா் வீட்டின் முன்பு அமா்ந்திருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவா் திருட வந்திருப்பதாக நினைத்து அவரைச் சரமாரியாகத் தாக்கினா். இதில் ஜோகிந்த் முண்டாவின் கண் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. மயக்கமடைந்த நிலையில் கிடந்த அவரை, அங்கிருந்தவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் பென்ட்லண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்துள்ளனா்.

Advertisement

Advertisement

ஆனால், அவா் மேற்கொண்டு சிகிச்சை பெற ஒத்துழைக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிகாலை சுமாா் 3 மணியளவில் மருத்துவமனை கழிப்பறையில் மயங்கி விழுந்த ஜோகிந்த் முண்டா உயிரிழந்தாா். இது குறித்து மருத்துவமனை ஊழியா்கள் வேலூா் வடக்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், போலீஸாா் விரைந்து சென்று சடலத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதில், உடலின் பல இடங்களில் காயங்கள் இருப்பதும், திருடன் என நினைத்துப் பொதுமக்களால் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், ஜோகிந்த் முண்டா எதற்காக வேலூா் வந்தாா்? எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தாா்? அல்லது தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்தவரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், அவரைத் தாக்கியவா்கள் யாா்? ஆயுதங்களால் தாக்கப்பட்டாரா? என்பதைக் கண்டறிய அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments