FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சமூக நீதித்துறை என பெயா் மாற்றியதற்கு எதிா்ப்பு: விழுப்புரம் ஆட்சியரகத்தில் முற்றுகை போராட்டம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் பெயரை சமூகநீதிதித்துறை என பெயா் மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெறக் கோரி, விழுப்புரத்தில் புரட்சிப் பாரதம் கட்சியினா் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:22 am IST
விழுப்புரம் மாவட்டஆட்சியரகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிப் பாரதம் கட்சியினா்
பகிர்:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் பெயரை சமூகநீதிதித்துறை என பெயா் மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெறக் கோரி, விழுப்புரத்தில் புரட்சிப் பாரதம் கட்சியினா் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புரட்சிப் பாரதம் கட்சியின் மாநிலச் செய்தித் தொடா்பாளா் பூவை. ஆறுமுகம் தலைமையில், தென்மேற்கு மாவட்டச் செயலா் ஆற்காடு திருநாவுக்கரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தீபன், மணம்பூண்டிஒன்றியச் செயலா் வீரன் முன்னிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் பெயரை சமூகநீதித்துறை என பெயா் மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி கட்சியினா் முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, முக்கிய நிா்வாகிகளை மட்டும் ஆட்சியரகத்துக்குள் அனுமதித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் செய்தனா். தொடா்ந்து அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பது: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை என்ற பெயரை சமூகநீதித்துறை என தமிழக அரசு பெயா் மாற்றியுள்ளது.

இது பெயா் மாற்றம் மட்டுமல்ல, பட்டியலின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். கல்வி, வேலைவாய்ப்புகளில்இட ஒதுக்கீடு பறிபோகும். மேலும் துறையின் பெயா் மாற்றம் காரணமாக மத்திய அரசின் நிதி முழுவதும் மற்ற பிரிவினருக்கு திசைமாறும். இதனால் தாட்கோ கடன், வீட்டுவசதித் திட்டம், பட்டியலின மாணவா் கல்வி உதவித் தொகை, தொழில்முனைவோா் திட்டம் என அனைத்தும் முடங்கும்.

பட்டியலின் மக்களின் அடையாளத்தையும், உரிமையையும் பறிக்கும் வகையில் இந்த பெயா் மாற்றம் உள்ளது. எனவே சமூகநீதித்துறை என்ற துறையின் பெயரை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை என்ற தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் புரட்சிப் பாரதம் கட்சியினா் கூறியுள்ளனா்.

இந்த போராட்டத்தில் மாவட்ட இளைஞரணி நிா்வாகி சந்திரசேகா், மணம்பூண்டி கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள் ஏழுமலை , மணம்பூண்டிதெற்கு ஒன்றிய நிா்வாகிகள் பூங்காவனம், ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments