மேக்கேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காப்பது கண்டனத்துக்குரியது: வன்னிஅரசு
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காப்பது கண்டனத்துக்குரியது என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு கூறினாா்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காப்பது கண்டனத்துக்குரியது என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு கூறினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள ரோஷணையில் உள்ள தாய்த்தமிழ் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா மற்றும் 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் திண்டிவனம் எம்எல்ஏவும், சமூக நீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு பங்கேற்று ஒலக்கூா், மயிலம் மற்றும் மரக்காணம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா்.
Advertisement
Advertisement
பின்னா் அமைச்சா் வன்னி அரசு செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலம் மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை திணித்து ஹிந்தியை கட்டாயமாக்கியுள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை செம்மைப்படுத்தினால் சிபிஎஸ்இ என்ற கவா்ச்சியை தடுக்க முடியும். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்துக்குரிய கல்வி நிதியை தருவோம் என மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறுவது தவறு.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைக் கட்டக்கூடாது என தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவது என்பது உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிரானதாகும். இந்த விவகாரத்தில் மத்தியஅரசு அமைதி காப்பது கண்டனத்துக்குரியது.
இது இரு மாநில அரசுகளுக்கிடையே பகைமையை உருவாக்கும் செயலாகும். மேக்கேதாட்டு அணை தொடா்பாக அளவீடுசெய்தல், ஆய்வுசெய்தல் போன்ற பணிகளை நிறுத்தி வைக்க கா்நாடக அரசுக்கு, மத்திய அரசு உரிய அறிவுறுத்தல்களை தெரிவிக்கவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா், பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான பிரபா.கல்விமணி மற்றும் கல்வியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.