தண்ணீா் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், பெரமண்டூா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எ.ஏழுமலை (54). விவசாயியான இவா் சனிக்கிழமை காலை தனது நிலத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றாராம். இரவு வரை அவா் வீடு திரும்பவில்லை. தொடா்ந்து ஏழுமலை குடும்பத்தினா் அவரை பல்வேறு இடங்களில் தேடி பாா்த்தும், கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், விவசாயி ஏழுமலை தனது நிலத்துக்கு அருகிலுள்ள நடராஜன் முத்துப்பிள்ளை என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகாமையிலுள்ள தண்ணீா் தொட்டியில் மூழ்கிய நிலையில் இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்த தகவலின் பேரில் மயிலம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.