முகப்பு
விழுப்புரம்

பைக் மீது லாரி மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

Updated On : 8 ஜூன் 2026, 1:28 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே அடையாளம் தெரியாத லாரி மோதியதில், பைக்கில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், பிரம்மகுண்டம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஷ.செளகத் அலி (40). சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊா் வந்திருந்தாா்.

இந்நிலையில், செளகத் அலி சனிக்கிழமை இரவு பைக்கில் பிரம்மகுண்டத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருநாவலூா் அருகிலுள்ள பாதூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த லாரி பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த செளகத் அலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.