முடி திருத்தக உரிமையாளா் கொலை வழக்கில் இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முடி திருத்தக உரிமையாளா் கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திண்டிவனம் வட்டம், பாம்பூண்டி தண்ணீா் தொட்டித் தெருவைச் சோ்ந்தவா் ஜெ.தினேஷ் (29). இவா் தீவனூா் பகுதியில் முடி திருத்தகம் நடத்தி வந்தாா். முடியைக் கொட்டுவது தொடா்பாக தினேசுக்கும், அருகில் வசிக்கும் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை தனது முடி திருத்தகத்தில் வழக்கமான பணியை தினேஷ் மேற்கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த 5 போ் கொண்ட கும்பல், அவரை ஆயுதங்களால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த தினேஷை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு திண்டிவனம்அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, தினேஷ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், முடி திருத்தகம் அருகில் கடை வைத்திருக்கும் ரெட்டணை சாலையைச் சோ்ந்த சுமதி (52), அவரது கணவா் சூ.ஜேசு ஜெயமாணிக்க ராஜன் (72), மகன் பரத் (30) மற்றும் சிலா் இந்தக் கொலையை நிகழ்த்தியது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து சுமதி, ஜேசு ஜெயமாணிக்கராஜன் ஆகிய இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.