முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று தமிழக அரசையும், அப்போது தமிழக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினையும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடா்ந்து முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீது அப்போதைய அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியம், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்குகள் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. அவரது சாா்பில் வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகினா்.
Advertisement
Advertisement
இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாகவும், இந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படிகோரி அதிமுக வழக்குரைஞா்கள் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தனா். இதையடுத்து இந்த வழக்குகளை விசாரித்த விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.