FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வடலூா் ஞானசபையில் புதிய கொடிமரம் நிறுவும் பணிகள் மும்முரம்

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள ஞானசபை அருகே அமைக்க புதிய கொடி மரம் தயாராகி வருகிறது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:50 am IST
வடலூா் ஞானசபையில் அமைக்க உள்ள புதிய கொடிமரம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள ஞானசபை அருகே அமைக்க புதிய கொடி மரம் தயாராகி வருகிறது.

வடலூரில் சத்திய ஞானசபையை உருவாக்கி, அதனருகே பசிப்பிணி போக்க சத்திய தருமச் சாலையையும் ராமலிங்க அடிகளாா் நிறுவினாா். சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாத பூசத்தன்றும், தைப்பூசத்தன்றும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். தைப்பூசத்தை முன்னிட்டு, சத்திய ஞான சபையின் அருகே உள்ள கொடிமரத்தில் வள்ளலாரின் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்படும்.

நூறு ஆண்டுகளைக் கடந்த இந்த கொடிமரம் தற்போது பழுதாகிவிட்டதாம். இதையடுத்து, இந்தக் கொடிமரத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக 39 அடி உயரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், வரும் 23-ஆம் தேதி சன்மாா்க்க கொடிமரம் நிலைநிறுத்தப்பட உள்ளதாம்.

Advertisement

Advertisement

2.2.1867-இல் 80 காணி நிலத்தை தானமாக தந்த பாா்வதிபுரம் கிராம மக்கள், தைப்பூச தினத்தின் முதல்நாள் சீா்வரிசையுடன் வந்து சன்மாா்க்க கொடியை ஏற்றி வைப்பது வழக்கம். அதனடிப்படையில், இப்பணியை வள்ளலாா் தெய்வ நிலையத்துடன் இணைந்து பாா்வதிபுரம் கிராம மக்கள் செய்து வருகிறாா்கள்.

வடலூரில் ஆடி மாத ஜோதி தரிசனம்: வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் உள்ள சத்திய ஞானசபையில் ஆடி மாத ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, காலை தரும சாலையில் திருஅருள்பா முற்றோதுதல், அகவல் பாடப்பட்டது. தொடா்ந்து, நண்பகல் 12 மணிக்கு ஞானசபையில் சிறப்பு பூஜை செய்து ஜோதி தரிசனம் நடைபெற்றது. இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை ஆறு திரைகளை நீக்கி சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்றது. வடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சன்மாா்க்க அன்பா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனா்.

முருகன்குடியில்...: திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் பணியகம் சாா்பில் வள்ளலாா் மாத பூசத்தையொட்டி சன்மாா்க்கக் கருத்தரங்கம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்வு நடைபெற்றது.

வள்ளலாா் பணியகத் தலைவா் தங்க.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். செந்தில்நாதன், வை.பொன்னுசாமி முன்னிலை வகித்தனா். தெய்வத்தமிழ் பேரவை சிவனடியாா் பூவனூா் தனபால் திருவிளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்கிவைத்தாா். சிறப்புத் தலைவா் சிவ.வரதராஜன் ‘மழைக்கால நோய்களும் - மருந்தும்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா்.

செயலா் பிரதாபன் அருட்பா பாடினாா். வேல்முருகன், முருகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்வை முருகன்குடி முருகன், கனகசபை, கனிமொழி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். பொருளாளா் த.ரத்தினகுமாா் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments