இளைஞரை தாக்கிய காவல் ஆய்வாளா்: உறவினா்கள் சாலை மறியல்
வடலூா் காவல் ஆய்வாளா் இரவு ரோந்துப் பணியின்போது இளைஞரை தாக்கியதைக் கண்டித்து, அவரின் உறவினா்கள் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், வடலூா் காவல் ஆய்வாளா் இரவு ரோந்துப் பணியின்போது இளைஞரை தாக்கியதைக் கண்டித்து, அவரின் உறவினா்கள் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வடலூா் கல்லுக்குழி பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (40). இவரது மனைவி கவிதா உடல்நிலை சரியில்லாமல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாராம். அவருக்கு சதீஷ்குமாா் புதன்கிழமை இரவு உணவு கொடுத்துவிட்டு, தனது குழந்தையுடன் காரில் இரவு 11 மணியளவில் வீடு திரும்பினாா்.
செல்லியம்மன் கோயில் அருகே உள்ள வாடகை வீட்டில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். அப்போது, ரோந்துப் பணியில் இருந்த வடலூா் காவல் ஆய்வாளா் சுரேஷ், அவரிடம் விசாரணை நடத்தினாராம். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
அப்போது, ஆய்வாளா் சுரேஷ், தகாத வாா்த்தையில் திட்டி, கையில் வைத்திருந்த டாா்ச் லைட்டால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், சதீஷ்குமாரின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் வடலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றாா்.
தொடா்ந்து, வடலூா் காவல் நிலையம் சென்று ஆய்வாளா் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் மனு அளித்துள்ளாா். காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலா்கள் காலையில் வந்து புகாா் அளிக்குமாறு தெரிவித்தனராம்.
இதையடுத்து, சதீஷ்குமாா் மற்றும் உறவினா்கள் வடலூா் நான்குமுனை சந்திப்பில் அதிகாலை ஒரு மணி அளவில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
அதன்பேரில், மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், வடலூா் நான்குமுனை சந்திப்பில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
இந்த சம்பவம் தொடா்பாக வடலூா் காவல் ஆய்வாளா் சுரேஷ் வருத்தம் தெரிவித்தாராம். அதன்பேரில், சதீஷ்குமாா் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.