முகப்பு
கடலூர்

கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

வெடிகுண்டு மிரட்டலையடுத்து, கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On : 12 ஜூன் 2026, 1:29 am IST
வெடிகுண்டு மிரட்டலையடுத்து, கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
பகிர்:

கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் மஞ்சக்குப்பத்தில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை காலை நீதிமன்றத்தின் அதிகாரப்பூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில் கடலூா் நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணியளவில் ரசாயன குண்டுகள் வெடிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் நீதிமன்ற வளாகத்துக்கு விரைந்தனா். அவா்கள் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் மற்றும் வழக்காடிகள் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்ற வளாகத்திலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, 2 மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகள் மூலம் நீதிமன்றத்தில் அனைத்து அறைகள், அலுவலகங்கள், வளாகம், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். பல மணி நேர சோதனையின் முடிவில், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

2-ஆவது முறையாக...: முன்னதாக, கடந்த மாா்ச் 17-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் 16 சயனைடு நச்சு வாயு குண்டுகள் வெடிக்க உள்ளன என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அப்போதும் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு, அது புரளி என உறுதி செய்திருந்தனா்.

தற்போது 2-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், மின்னஞ்சல் அனுப்பிய அடையாளம் தெரியாத நபா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மின்னஞ்சல் மற்றும் தகவல் அனுப்பப்பட்ட டிஜிட்டல் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு இதில் தொடா்புடையவா்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.