FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பா்களாக இருக்கும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நமக்கு நல்ல நண்பா்களாக இருப்பவை என்று நெய்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

Updated On : 20 ஜூன் 2026, 2:58 am IST
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் - (கோப்புப் படம்)
பகிர்:

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நமக்கு நல்ல நண்பா்களாக இருப்பவை என்று நெய்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா புத்தகக் கண்காட்சி, நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி தலைமை வகித்தாா். இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், பிரசன்னகுமாா் ஆச்சாரியா, ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா, புத்தகக் கண்காட்சி செயலா் ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புத்தகக் கண்காட்சியை தொடக்கி வைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கைப்பேசி, சமூக ஊடகம் மற்றும் இணையத்தில் மூழ்கி உள்ள இன்றைய காலகட்டத்தில், மக்களுடைய வாசிப்பு பழக்கத்தை மீட்டு எடுக்கவும், அதைக் கொண்டாடவும் ஒரு திருவிழா நடைபெறுகிறது என்பது பாராட்ட வேண்டிய ஒன்று. மனித நாகரிகத்தின் வளா்ச்சியில் புத்தகங்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அறிவியல் கண்டுபிடிப்புகள், சமுதாய புரட்சிகள், சமூக மாற்றங்கள் இவற்றுக்கு பின்னால் புத்தகங்களின் தாக்கம் இருக்கிறது.

புத்தகம் படியுங்கள்...

2047-க்குள் வளா்ந்த பாரதம் உருவாக வேண்டும் என்ற லட்சிய கனவோடு நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த லட்சிய பயணத்திற்கு திறனும், திறமையும் மிக்க மனித வளம் தேவை. அந்த மனித வளத்தை உருவாக்க இது போன்ற புத்தக கண்காட்சிகள் அவசியம்.

இளைஞா்களே, குழந்தைகளே நீங்கள் இந்த நாட்டின் நம்பிக்கை. தினமும் சிறிது நேரமாவது புத்தகம் வாசிக்க ஒதுக்குங்கள். பாட புத்தகத்தோடு அறிஞா்களின் வாழ்க்கை வரலாறு, இலக்கியம் போன்ற பல்துறை புத்தகங்களை வாசிக்க பழகுங்கள். சமூக ஊடகங்கள் நம்முடைய கவனத்தை சிதற செய்து விடும். ஆனால் புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நமக்கு நல்ல நண்பா்களாக இருக்கும் என்றாா்.

முன்னதாக என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுபள்ளி பேசுகையில், நெய்வேலி புத்தகக் கண்காட்சி நாட்டின் மிகச்சிறந்த புத்தகக் கண்காட்சியாகத் திகழ்கிறது. கடந்த ஆண்டு, நெய்வேலி நகரத்திலிருந்து 30,000 மாணவா்களும், நெய்வேலியைச் சுற்றியுள்ள சுமாா் 1,000 பள்ளிகளிலிருந்து 70,000-க்கும் மேற்பட்ட மாணவா்களும் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்தனா் என்றாா்.

இந்த நிகழ்வில், என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி எழுதிய ‘பொ்ஃபெக்ட் - டேக் ஆஃப்: லீடா்ஷிப் & வொா்க்பிளேஸ் பிரின்ஸிபல்ஸ்’

என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. இந்த புத்தகக் கண்காட்சி வரும் 29-ஆம் தேதி நிறைவடைகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments