சுற்றுலாவை மேம்படுத்த கடலோர காவல் படையின் கப்பலை நிறுத்த முடிவு
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த கடலோர காவல்படையின் கப்பல் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க நிறுத்தப்பட இருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த கடலோர காவல்படையின் கப்பல் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க நிறுத்தப்பட இருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
இது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
கடலோர காவல் படை அதிகாரிகள், புதுவை தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், சுற்றுலாத் துறை, பிரெஞ்சு கடல் சாகச நிறுவனம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது .
இதில், புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த, கடலோர காவல்படைக்குச் சொந்தமான பணிக்காலம் முடிந்த கப்பலை நாம் கேட்டோம். அதன்படி, கப்பலை அரசுக்கு இலவசமாக தர ஒப்புதல் அளித்துள்ளனர். கப்பல் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தக் கப்பல் புதுச்சேரி கடலில் 12 நாட்டிக்கல் தொலைவில் காட்சிக்கு நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் இருந்து படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்டு கப்பலை பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளன. அதேபோல, பிரெஞ்சு கடல் சாகச நிறுவனம், கடலோர காவல்படை, புதுச்சேரி சுற்றுலாத் துறை இணைந்து கடல் சாகச விளையாட்டு நிகழ்வுகளும் நடத்த உள்ளது.
இதன் மூலம் சுற்றுலா மேம்படும், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்திட்டம் அந்தமான் போன்ற இடங்களில் உள்ளது. இதில் அரசுக்கு எந்தவித செலவும் கிடையாது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் சுற்றுலாத் துறைக்கு வருவாய் அதிகளவில் கிடைக்கும்.
இதற்காக மத்திய அரசிடம் அனுமதி பெற கோப்புகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.