கருணாநிதி மறைவு: தலைவர்கள் இரங்கல்
திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவுக்கு புதுவையில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவுக்கு புதுவையில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி: இந்தியாவின் முதுபெரும் தலைவரும், தமிழகத்தின் தனிப்பெரும் தலைவரும், திமுக வழித்தோன்றலாக விளங்கிய முத்தமிழ்
அறிஞர் கருணாநிதியின் மறைவு, இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
கருணாநிதி மறைவினால் வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்துக்கும் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன்:
தனது நெடிய உழைப்பாலும், கொண்ட கொள்கையில் உறுதியோடும், தலைமைப் பண்பாலும் தமிழக அரசியலில் முதுபெரும் தலைவராக விளங்கியவர் கருணாநிதி. சுயமரியாதை உணர்வுகளை கட்டிக் காத்தவர். சிறந்த எழுத்தாளர், மதிநுட்பம் கொண்டவர், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர்.
அவரது மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும்.
பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன்: இந்திய அரசியலில் பலமுறை ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக திகழ்ந்த மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர். ஏழை மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
ஒரு முறைகூட தோல்வியை சந்திக்காத ஒரே எம்எல்ஏ உலகில் எந்த நாட்டிலும் இல்லை என்ற ஒப்பில்லா சாதனை புரிந்த திமுக தலைவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார்: கருணாநிதி எங்களுக்கு தாயாக, தந்தையாக இருந்தார். அறிவாய், எங்களின் மானம் காக்கின்ற ஆடையாகக் கூட இருந்தார். அவரின் இழப்பு தமிழக மக்களுக்கும், நாட்டிற்கும் பேரிழப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் அ.மு.சலீம், மார்க்சிஸ்ட் பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம், எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.