புதுச்சேரி: புதுவை இந்தியாவோடு இணைந்த நாளையொட்டி(ஆக.16) கீழூர் நினைவிடத்தில் அமைச்சர் தேனி ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கீழூர் நினைவு தூணுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு, பிரெஞ்சு ஆட்சியைவிட்டு வெளியேறிய புதுவை பிரதேச மக்கள், கடந்த 1962 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி முறைப்படி இந்தியாவுடன் இணைந்தனர்.
இந்த நாள், ஆண்டுதோறும் புதுவை அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி செவ்வாய்க்கிழமை சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவுடன் புதுச்சேரி இணைவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட இடமான கீழூர் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில், புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். இதனையடுத்து இருவரும் அங்குள்ள நினைவு தூணுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தியாகிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதையும் படிக்க: நாய்களைத் துன்புறுத்திய காவலாளி: பிரம்பால் அடித்த ஆசிரியை
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர், அரசு உயரதிகாரிகள் மற்றும் சுதந்திர போராட்டத் தியாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.