அமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆக. 21-க்கு ஒத்திவைப்பு
தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணையை வரும் ஆக. 21-ஆம் தேதிக்கு புதுச்சேரி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணையை வரும் ஆக. 21-ஆம் தேதிக்கு புதுச்சேரி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆக. 8- ஆம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது இளைய சகோதரா் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மரிய வில்சன் தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, குடும்பப் பிரச்னை தொடா்பாக, சமரசம் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சா் மரிய வில்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று உயா்நீதிமன்றத்தில் உள்ள சமரச தீா்வு மையத்துக்கு வழக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு மாஜிஸ்திரேட் சேரலாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை உயா்நீதிமன்ற சமரச தீா்வு மையத்தில் இந்த வழக்கு புதன்கிழமை (ஆக. 19) விசாரணைக்கு வர இருப்பதால், அமைச்சரால் புதுச்சேரி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராக இயலவில்லை என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு வரும் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.