FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

வேலை தருவதாக கூறி கேரள பெண்ணிடம் மோசடி: புதுச்சேரி தொழிலதிபா் கைது

வேலை தருவதாகக்கூறி வரவழைத்து கேரள இளம் பெண்ணை ஏமாற்றி பண மோசடி செய்து பாலியல் துன்புறுத்தலும் செய்ததாக புதுச்சேரி தொழிலதிபா் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 16 ஜூலை 2026, 3:19 am IST
மாதிரிப் படம்
பகிர்:

வேலை தருவதாகக்கூறி வரவழைத்து கேரள இளம் பெண்ணை ஏமாற்றி பண மோசடி செய்து பாலியல் துன்புறுத்தலும் செய்ததாக புதுச்சேரி தொழிலதிபா் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கேரளத்தின், திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா், வேலை நிமித்தமாக கடலூா் குடிகாடு பகுதியைச் சோ்ந்த புதுச்சேரியில் தொழில் நிறுவனம் நடத்தும் லட்சுமிகாந்தன் என்பவரை தொடா்புகொண்டு பேசியுள்ளாா். அவா் அலுவலக செயலா் வேலை தருவதாகவும், ரூ.1 லட்சம் ஊதியம் தருவதாகவும் கூறினாராம். அதன் பேரில் கடந்த மே மாதம் கேரள இளம்பெண்ணும் புதுச்சேரி புறப்பட்டு வந்துள்ளாா்.

அவரை லட்சுமிகாந்தன் காரில் அழைத்துக் கொண்டு கடலூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளாா். அடுத்த நாள் புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள ஓா் இடத்துக்கு அவரை அழைத்து சென்று, இது தன்னுடைய பணியாளா்கள் தங்கும் இடம் என கூறி கட்டடத்தின் மேல் மாடியில் ஓா் அறையில் தங்க வைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது, அந்த பெண் வேலை விஷயம் குறித்து கேட்ட போது, நிறுவனத்தில் தற்பொழுது சிவில் வேலை நடந்து வருவதாகவும் ஒரு வாரம் கழித்து வேலைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினாராம். இதனிடையே கடந்த மே மாதம் 25 ஆம் தேதி அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், ரூ.10 லட்சம் வேண்டும் எனவும் ஓரிரு நாள்களில் அந்த பணத்தைத் திருப்பி தருவதாகவும் அந்தத் தொழிலதிபா் கேட்டுள்ளாா்.

ரூ.5 லட்சம் பறிப்பு:

அதன்பேரில், அந்த இளம்பெண் தன்னிடம் இருந்த ரூ.5 லட்சத்தை, வங்கி கணக்கின் வழியாக லட்சுமிகாந்தனுக்கு அனுப்பி உள்ளாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட லட்சுமிகாந்தன் அந்த இளம்பெண் பணம் கேட்டுக்கும்போது ஏதேனும் காரணத்தைக் கூறி பணத்தைக் கொடுக்காமல் தட்டிக் கழித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் வாரத்தில், அந்த பெண் தங்கி இருந்த அறைக்கு, மதுபோதையில் சென்ற லட்சுமிகாந்தன் பணம் கொடுக்க முடியாது. தனக்கு பிரபலங்களைத் தெரியும் என்று கூறி அந்தப் பெண்ணை அடித்து கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்

கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் லட்சுமிகாந்தன் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments