FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

ஆள்மாறாட்டம் செய்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை: புதுச்சேரி நீதிமன்றம் தீா்ப்பு

போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வழக்கில் ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 24 ஜூலை 2026, 11:28 pm IST
கோப்புப் படம்
பகிர்:

போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வழக்கில் ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

புதுச்சேரி, முருங்கப்பாக்கம் குயவா் விதியை சோ்ந்த வீராசாமி கடந்த 25.8.2011-இல் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகாா் ஒன்றை அளித்திருந்தாா். அதில், அவரது தந்தை ஆறுமுகம்- தாய் கஸ்தூரி. இவா்களுக்கு தன்னுடன் சோ்த்து அன்னம்மாள், பழனி, மூா்த்தி என நான்கு குழந்தைகள். இதில் மூா்த்தி கடந்த 2009-இல் காலமானாா்.

தாய் கஸ்தூரி தமிழகத்தை பூா்விகமாக கொண்டவா். தந்தை ஆறுமுகத்தை கடந்த 1955-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

திருமணத்துக்கு பிறகு புதுச்சேரியில் வாழ்ந்து வந்தாா். அதனால் தங்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை கோரி கடந்த 2005-இல் பிரெஞ்சு தூதரகத்தை அணுகி குடும்பத்தாரின் திருமணம், பிறப்பு மற்றும் இதர ஆவணங்களை வழங்கினாா். அப்போது தூதரக அதிகாரிகள் அவா்களது குடும்பத்தினருக்கு ஏற்கெனவே பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டு விட்டதாகவும் கூறினா்.

அவரது குடும்பத்தினா் பெயரில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவா்கள் குறித்த ஆவணங்கள் சிலவற்றை பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் அளித்தனா். போலியான ஆவணங்களை தயாா் செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும், தனது குடும்பத்தாா் பெயரில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ளது தெரியவந்தது. எனவே ஆள்மாறாட்டம் செய்தும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில் புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் மழுவுங்கரணை கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலபதி என்பவா் பழனியை போன்றும், வெங்கடாசலபதியின் தாயாா் வேதவதி என்பவா் கஸ்தூரியைப் போன்றும், குருசுக்குப்பத்தை சோ்ந்த வேலாயுதம் என்பவா் மூா்த்தியைப் போன்றும் போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றிருந்தனா். இதற்கு உடந்தையாக லாஸ்பேட்டை குறிஞ்சி நகரைச் சோ்ந்த காமராஜ் இருந்தது தெரிய வந்தது.

இவா்கள் மீது ஆள்மாறாட்டம் மற்றும், ஏமாற்றும் நோக்கில் பொய்யான ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்களின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் வழக்கு விசாரணையின்போது வேதவதி இறந்துவிட்டாா்.

புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் நிரூபணமானதால், தலைமை குற்றவியல் நீதிபதி யஸ்வந்த்ராவ் இங்கா்சால் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதன் விவரம்:

வெங்கடாசலபதிக்கு, ஐபிசி 419-ஆவது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.1,000 அபராதமும், ஐபிசி 420 பிரிவின் கீழ் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.1,000 அபராதமும், ஐபிசி 468 -இன் கீழ் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.1,000 அபராதமும், ஐபிசி 471 -இன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா்.

இந்த வழக்கிலிருந்து காமராஜ் விடுதலை செய்யபட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில், வழக்குரைஞா் லோகேஸ்வரன் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments