மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெற புதிய திட்டம்!
புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது பற்றி...
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெறும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மற்றும் அந்தத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கும் மருத்துவச் செலவைத் திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
புதுச்சேரியில் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதலான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாஜீம், ஆறுமுகம், செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் அ. குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.