சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ரௌடிக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ரௌடிக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரௌடிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் உருவையாறு செல்வா நகரைச் சோ்ந்தவா் முருகன் (எ) பட்டா முருகன் (24). இவா், மங்கலம் காவல் நிலையத்தின் ரௌடிகள் பட்டியலில் உள்ளாா். இவா் மீது கொலை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரியை சோ்ந்த 15 வயது சிறுமியுடன் நட்பாகப் பழகி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதில் அச் சிறுமி கா்ப்பமான நிலையில், முருகன் தலைமறைவானாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி மங்கலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா்.
இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ நீதிமன்ற நீதிபதி சுமதி முன் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து, குற்றம் நிரூபணமான நிலையில், முருகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பச்சையப்பன் ஆஜராகி வாதாடினாா்.