மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்க்கைக் கல்வி அவசியம்: டிஎஸ்பி அறிவுறுத்தல்
கல்வியுடன் நடைமுறை வாழ்க்கைக் கல்வியையும் பெற்றால் தான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் அறிவுறுத்தினார்.
கல்வியுடன் நடைமுறை வாழ்க்கைக் கல்வியையும் பெற்றால் தான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் திருப்பஞ்சாவடிமேடு வித்யோதயா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பேராசிரியர் ஜி.கிருஷ்ணா வரவேற்றார். ஜி.ஏ. அறக்கட்டளை நிர்வாகி பி.அய்யாசாமி தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் பி.வடிவேல், கல்லூரி முதல்வர்(பொ) ஆர்.அய்யனார், பேராசிரியர்கள் டி.ராஜஸ்ரீ, எம்.வேல்முருகன், எஸ்.குமார், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஜி.விஸ்வநாதன் சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெ.சங்கர் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது: சமுதாயத்துக்கு வழிகாட்டியாக விளங்கும் சிறப்பான ஆசிரியர் பணியை, மாணவர்கள் தேர்வு செய்துள்ளது பாராட்டத் தக்கது.
மாணவர்களுக்கு கல்வியோடு வாழ்க்கைக் கல்வியை கற்றுத் தர வேண்டியது அவசியமாகும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வியையும் சொல்லித் தர வேண்டும். சுற்றுச்சூழலை உணர்ந்து, சமுதாயத்துக்கு மதிப்பளிக்கும் வாழ்க்கை கல்வியும் பெற்றால் தான் சிறப்பான எதிர்காலம் அமையும். பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளிடம் நேரம் ஒதுக்கிப் பேசுவதோடு, உலக நிகழ்வுகளை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெண் பிள்ளைகளுக்கு மதிப்பு சேர்ப்பதற்காகவும், அவசரத் தேவைக்கும் உதவும் வகையிலும் தங்க சங்கிலியை பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர். இதன் மதிப்பு தெரியாத பெண்கள், கவனக்குறைவாக செயல்படுவதால், சங்கிலி பறிப்புகள் நடக்கின்றன.
இது போன்ற சம்பவங்களில், அவசர போலீஸ் உதவி எண்100-க்கு தொடர்பு கொள்ள வேண்டும். குற்றச்சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தெரிவிக்கும் பொருட்டு, மகளிர் கல்லூரி, பள்ளிகளில் புகார் பெட்டிகளை வைத்துள்ளோம். மாணவிகள் புகார்கள், குறைகளை தெரிவித்தால், ரகசியமாக வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
விழாவில் பெற்றோர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.