காவல் நிலையம் அருகே 1,050 லிட்டர் சாராயம் பறிமுதல்: ஒருவர் கைது
விழுப்புரத்தில் காவல் நிலையம் அருகே விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 லிட்டர் சாராயத்தை மது விலக்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரத்தில் காவல் நிலையம் அருகே விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 லிட்டர் சாராயத்தை மது விலக்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் இருந்து எரிசாராயம் கடத்தி வரப்பட்டு, விழுப்புரம், மேற்கு காவல் நிலையம் அருகேயுள்ள ஜி.ஆர்.பி. தெரு, பெரிய காலனியில் பதுக்கி வைத்து விற்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன.
இதுதொடர்பான புகார்களின் பேரில், காவல்துறை நடவடிக்கை எடுத்தும், அங்கு தங்கு தடையின்றி சாராய விற்பனை நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பெரிய காலனி பகுதியில் கேன்களில் சாராயம் கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான போலீஸார் நள்ளிரவில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அண்ணாமலை என்பவரின் வீட்டின் பின்புறம் 30 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 லிட்டர் சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பெரிய காலனியைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் மணிமாறன்(34) வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி அருகேயுள்ள ஆண்டையார் பாளையத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் இருந்து சாராயம் வாங்கி வந்தது தெரிய வந்தது.
தலைமறைவான ஐயப்பனை போலீஸார் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.