காவலர் உடல் தகுதித் தேர்வை விடியோவில் பதிவு செய்ய உத்தரவு
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் காவலர் உடல் தகுதித் தேர்வில் இடம்பெறும் அனைத்து சோதனைகளையும் விடியோ பதிவு செய்ய டிஐஜி உத்தரவிட்டார்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் காவலர் உடல் தகுதித் தேர்வில் இடம்பெறும் அனைத்து சோதனைகளையும் விடியோ பதிவு செய்ய டிஐஜி உத்தரவிட்டார்.
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலிருந்து காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேர்வு நடத்தும் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு வியாழக்கிழமை தேர்வு நடத்துதல் வழிமுறைகள் குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில், தேர்வு மையத் தலைவர் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: உடல் தகுதித் தேர்வு காலை 6 மணிக்கு தொடங்கப்படும். ஆகவே, தேர்வு நடத்தும் போலீஸார் காலை 5 மணிக்கு தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும். தேர்வு மைய வளாகத்துக்குள் தேர்வர்கள் தவிர்த்து, அவர்களுடன் வருபவர்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது. முதலில் உயரத்தை அளவிட வேண்டும். அதையடுத்து மார்பு அகலத்தை அளவிட வேண்டும். கடைசியாக ஓட்டப்போட்டி நடத்த வேண்டும்.
சோதனையின்போது ஒருவருக்கு தேவையான உயரம் இல்லை என்றால், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று, அவரை உடனே வெளியேற்றிவிட வேண்டும். அடுத்தத் தேர்வுக்கு அவரை அனுமதிக்கக் கூடாது. முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து சோதனைகளும் விடியோ பதிவு செய்யப்பட வேண்டும். தேர்வு நடைபெறும் மையத்துக்குள், உயர் அதிகாரிகள் தவிர்த்து மற்ற தேர்வு மைய போலீஸார் யாரும் செல்லிடப்பேசி கொண்டு வரக்கூடாது. தேர்வு நடத்தும்போது எந்த விதமான தவறுகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அடுத்த நிலையில் உள்ள உயரதிகாரியை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஏ.டி.எஸ்.பி. முகிலன், சிறைத் துறை ஏடிஎஸ்பி கிருஷ்ணராஜ், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர்(பொ) முகுந்தன், டி.எஸ்.பிக்கள். வீமராஜ், சரவணன், நீதிராஜ், தனிப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்து, 3,343 பேர் இந்த உடல் திறன் தேர்வில் பங்கேற்கவுள்ளனர். முதல் நாளான வெள்ளிக்கிழமை(செப்.7) விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,000 ஆண்கள் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை(செப்.8) மீதமுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 513 ஆண்களும், கடலூர் மாவட்டச் சேர்ந்த 487 பேரும் தேர்வில் பங்கேற்க
அழைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.