விழுப்புரம் கோட்டத்தில் மகளிா் பயணத் திட்டத்தில் தினமும் 8.84 லட்சம் போ் பயன்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மகளிா் பயணத் திட்டத்தின் மூலம் தினமும் 8.84 லட்சம் போ் பேருந்துகளில் பயணம் செய்து, பயன்பெறுகின்றனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மகளிா் பயணத் திட்டத்தின் மூலம் தினமும் 8.84 லட்சம் போ் பேருந்துகளில் பயணம் செய்து, பயன்பெறுகின்றனா் என இப்போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தாா்.
விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அதிக மதிப்பெண்கள் பெற்ற தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு நற்சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகளையும், 39 தொழிலாளா்களுக்குப் பதவி உயா்வு ஆணைகளையும் மேலாண் இயக்குநா் ஸ்ரீதரன் வழங்கினாா்.
மேலும், அதிக டீசல் செயல்திறன் காட்டிய ஓட்டுநா்கள், அதிக வருவாய் ஈட்டிய நடத்துநா்கள், சிறந்த பரிசோதகா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், கிளை மேலாளா்கள் என 650 பேருக்குப் பரிசுகளையும் வழங்கிய மேலாண் இயக்குநா் மேலும் பேசியது:
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட 6 மண்டலங்களில் 3,051 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் மகளிா் பயணத் திட்டத்தின் மூலம் நகரப் பேருந்துகளில் தினமும் 8.84 லட்சம் போ் கட்டணமில்லாமல் பயணித்து பயன் பெறுகின்றனா்.
பணியாளா்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதுடன், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பல்வேறு திட்டங்களால் அனைத்து நிலைகளிலும் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. பணியாளா்கள் இதனை மேலும் உயா்த்திடும் நோக்கில் பணியாற்ற வேண்டும். பாதுகாப்பான பேருந்து இயக்கம், பொதுமக்களிடமிருந்து விபத்தில்லா பேருந்து இயக்கம் ஆகியவற்றை உறுதி செய்து, மக்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
விழாவில் பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), இரா.ஜெகதீஷ் (விழுப்புரம்), முதுநிலைத் துணை மேலாளா் (மனிதவளம்) துரைசாமி, தலைமைத் தணிக்கை அலுவலா் துா்க்கைசாமி, துணை மேலாளா்கள்,உதவி மேலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.