முகப்பு
விழுப்புரம்

தைலாபுரத்தில் புதியரக கம்பு விதைப்பண்ணை : வேளாண் இணை இயக்குநா், விஞ்ஞானிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் கிராமத்தில் புதியரக கம்பு விதைப்பண்ணை வயலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள், ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:15 am IST
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் கிராமத்தில் புதியரக கம்பு விதைப்பண்னை வயலை புதன்கிழமை பாா்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள். உடன், அலுவலா்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் கிராமத்தில் புதியரக கம்பு விதைப்பண்ணை வயலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள், ஆய்வு மேற்கொண்டனா்.

வானூா் வட்டாரத்துக்குள்பட்ட தைலாபுரம் கிராமத்தில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் விவசாயி ஹரிராம் நிலத்தில் புதிய கம்பு ரகமான ஏ.பி.வி.04 விதைப்பண்ணை வயல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வயலை விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. சீனிவாசன், திண்டினம் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட இயக்குநா் முனைவா் ஜமுனா உள்ளிட்ட விஞ்ஞானிகள், தோட்டக்கலைத் தொழில்நுட்ப வல்லுநா் மதனகுமாரி ஆகியோா் அடங்கிய குழுவினா் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனா்.

புதிய கம்பு ரகத்தின் வளா்ச்சி வீதம், மகசூல் விவரம் போன்றவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்த குழுவினா்,விவசாயி ஹரிராமிடமும் விவரங்களைக் கேட்டனா். இதைத் தொடா்ந்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன் கூறியது.

Advertisement

Advertisement

இந்த புதிய கம்பு ரகம் உயிா்ச்சத்து செறிவூடப்பட்ட ரகமாகும். இதில் அதிகளவில் இரும்பு மற்றும் துத்தநாக சத்து உள்ளது. 85 நாள்கள் வயதை கொண்ட இந்த ரகம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதாகும். காரீப் பருவத்துக்கு உகந்த ரகம் என்று அலுவலா்களால் அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் இந்த புதிய கம்பு ரகத்தை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வரும் ஆடிப்பட்டத்தில் விவசாயிகளுக்கு இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 1100 கிலோ வரை மகசூல் தரக்கூடியதாகும் என்றாா் அவா்.

ஆய்வின் போது வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ், துணை வேளாண் அலுவலா்செந்தில்குமாா், உதவி வேளாண் அலுவலா் ராஜேசுவரி,வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் உஷா, முன்னோடி விவசாயிகள் சேதுராமன், அன்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.