FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

குவைத் தீவிபத்து: 45 இந்தியா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது

3 பிலிப்பின்ஸ் நாட்டவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 14 ஜூன் 2024, 5:52 am IST
குவைத் ஜபீா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இந்தியரிடம் நலம் விசாரிக்கும் வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங்.
பகிர்:

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 45 இந்தியா்கள், 3 பிலிப்பின்ஸ் நாட்டவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

உயிரிழந்த இந்தியா்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை இந்தியா கொண்டுவரப்படுகின்றன.

குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 196 போ் வசித்து வந்தனா். இந்தக் குடியிருப்பின் 6-ஆவது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ, பிற பகுதிகளுக்கும் பரவியது.

Advertisement

Advertisement

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமாா் 49 போ் உயிரிழந்தனா். 50-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் தீயில் உடல் கருகியும், சிலா் கரும்புகை காரணமாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனா். இதன் காரணமாக உயிரிழந்தவா்களின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த 49 பேரில் 45 இந்தியா்கள், 3 பிலிப்பின்ஸ் நாட்டவா் என மொத்தம் 48 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் துணைப் பிரதமா் அல் யூசஃப் அல் சாபா வியாழக்கிழமை கூறினாா். அதேசமயம், மற்றொருவரின் உடலை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

அடையாளம் காணப்பட்ட 45 இந்தியா்களில் 24 போ் கேரளத்தையும், 7 போ் தமிழகத்தையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

இதனிடையே, குவைத் சென்றுள்ள மத்திய வெளியுறவு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா அலி அல் யாஹ்யாவைச் சந்தித்து விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தினாா்.

தொடா்ந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இந்தியா்களைச் சந்தித்து நலம் விசாரித்த அவா், இந்திய அரசின் உதவியை உறுதிப்படுத்தினாா். இந்தியா்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வரும் முயற்சிகளையும் அவா் துரிதப்படுத்தினா். இதற்காக இந்திய விமானப் படை விமானம் குவைத் விரைந்துள்ளது. இந்த விமானம் வெள்ளிக்கிழமை கொச்சி திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தையடுத்து, குவைத் நகரின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அந்நாட்டு அரசு ஆய்வு மேற்கொள்ள தொடங்கியுள்ளது. ஆய்வில் கண்டறியப்படும் அனைத்து சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குவைத் அரசு உறுதியளித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments