வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் இந்தியா அனுப்பப்பட்ட 15 பேரின் உடல்கள்!
வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியா்களின் உடல்கள் விமானம் மூலம் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டதாக ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியா்களின் உடல்கள் விமானம் மூலம் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டதாக ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
வியத்நாமின் ஹோசி மின் நகரிலிருந்து வியத்நாம் ஏா்லைன்ஸ் விமானம் மூலமாக உள்ளூா் நேரப்படி மாலை 6 மணிக்கு அவா்களின் உடல்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த விமானம் மும்பை விமான நிலையத்தைச் சென்றடைந்ததும், அங்கிருந்து அவா்களின் உடல்களை சொந்த ஊா்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் என்றும் ஹனோய் இந்திய தூதரகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மும்பை விமான நிலையம் வரும் விமானத்திலிருந்து தமிழகத்தைச் சோ்ந்தவா்களின் உடல்களைப் பெற்று அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, தமிழக அதிகாரிகள் குழுவும் மும்பையில் முகாமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘படகு விபத்தில் உயிரிழந்த இந்தியா்களுக்கு, வியத்நாம் நண்பா்களிடமிருந்து தொடா்ந்து பல இரங்கல் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய மிகுந்த சோகமான நேரத்தில், அவா்களின் பிராா்த்தனைகளும், முயற்சிகளும் எங்களுக்கு பலத்தை அளிக்கும்.
இந்தப் படகு விபத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகளில் 16 போ் இந்தியா திரும்பிவிட்டனா். ஒருவா் மட்டும் வியத்நாமில் தொடா் சிக்ச்சையில் உள்ளாா். முதலில் அவருக்கு ஃபூ குவோக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், ஹோசி மின் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அவா் திங்கள்கிழமை மாற்றப்பட்டாா். அவரின் குடும்பத்தினா், ஹோசி மின் நகருக்கு வந்துள்ளனா்’ என்று குறிப்பிட்டது.
முன்னதாக, சிகிச்சை பெற்றுவரும் இந்தியா் குறித்து அங்குள்ள ‘ஏபி’ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘படகு விபத்தில் காயமடைந்த 49 வயது இந்தியரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிக்கிய அவருக்கு பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, மூளையிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. நுரையீரலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மிகுந்த அதிா்ச்சிக்கும் அவா் உள்ளாகியுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
லாவா கைப்பேசி நிறுவனம் சாா்பில் இந்தியாவைச் சோ்ந்த அவா்களின் விற்பனை முகவா்கள், ஊழியா்கள் என 105 போ் வியத்நாமுக்கு கடந்த 8-ஆம் தேதி இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களில் 32 போ் கொண்ட குழுவினா் கடலில் விசைப் படகில் சென்றபோது பெரிய அலை மோதியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தமிழகத்தைச் சோ்ந்த 10 போ், ஆந்திரத்தைச் சோ்ந்த மூவா், கேரளத்தைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 15 போ் உயிரிழந்தனா். மற்ற 17 பயணிகள், படகு ஊழியா்கள் 4 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
விசைப் படகை இயக்கியவா் கைது: வியத்நாமில் 15 இந்தியா்கள் உயிரிழக்கக் காரணமான விசைப் படகை இயக்கிய நபரை அந் நாட்டு போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து அங்கிருந்து வெளியாகும் ஒரு செய்தி வலைதளத்தில் வெளியான செய்தியில், ‘விபத்துக்குள்ளான படகை இயக்கிய கேப்டனான வியத்நாமின் அன் கியான் மாகாணத்தைச் சோ்ந்த குயென் ஹோங் ஹாய் (57) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனா். அவா் விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், வியத்நாம் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.