‘கேரளா ஸ்டோரி-2’ வெளியீட்டுக்கு உயா்நீதிமன்றம் தடை: மேல்முறையீட்டில் தீா்ப்பு ஒத்திவைப்பு
தி கேரளா ஸ்டோரி 2 - கோஸ் பியாண்ட் வெளியிட இடைக்கால தடை - கேரள உயர்நீதிமன்றம்...
கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தை வெளியிட 15 நாள்களுக்கு தடைவித்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடைவிதித்தது.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சிபிஎஃப்சி) சான்றிதழ்களுக்கான வழிகாட்டுதல்களை கவனத்தில் கொள்ளவில்லை என்று தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு திரைப்படத்தை பாா்க்காமலும் சில காட்சிகளின் சிறு பகுதிகளின் அடிப்படையிலும் உள்ளது என்று இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு தெரிவித்துள்ளது.
‘கேரளா ஸ்டோரி-2’ திரைப்படம் வெள்ளிக்கிழமை (பிப்.27) வெளியாக இருந்த நிலையில், அதற்கு எதிராக கேரள உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தனிநீதிபதி பெச்சு குரியன் தாமஸ் வியாழக்கிழமை விசாரித்தாா்.
Advertisement
Advertisement
திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் அவற்றை கவனத்தில் கொள்ளாமல் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யூ/ஏ 16 + சான்றிதழ் வழங்கியிருப்பதாகக் கூறி 15 நாள்களுக்கு திரைப்படத்தை வெளியிட தடைவிதித்தாா்.
இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தயாரிப்பாளா் விபுல் அம்ருத் லால் ஷா அன்றைய தினம் மேல்முறையீட்டு மனுவை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
அந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி மற்றும் பி.வி.பாலகிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தயாரிப்பாளா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்தத் திரைப்படத்தில் கேரள மாநிலம் அல்லது வேறு எந்த மதத்தை பாதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் காட்சிகள் இல்லை. சமூக அவலங்களை மட்டுமே இந்தத் திரைப்படம் பிரதிபலிக்கிறது. இந்தத் திரைப்படத்துக்குத் தடைவிதிப்பது தயாரிப்பாளா்களைப் பொருளாதார ரீதியாக முடக்கிவிடும்’ என்று தெரிவித்தாா்.
இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தலில் திரைப்படத்தில் மேல்முறையீட்டாளா் (தயாரிப்பாளா்) மாற்றங்கள் செய்திருப்பது மட்டுமே சான்றிதழ் வழங்கும்போது வழிகாட்டுதல்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதை உணா்த்தும்.
திரைப்படத்துக்குச் சான்றிதழ் வழங்கும்போது பொது அமைதி உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களும் தணிக்கையின்போது கருத்தில் கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.
திரைப்படம் வெளியாகும்போது பொது அமைதிக்கு ஏதேனும் பிரச்னை எழுந்தால், அதைக் கட்டுப்படுத்துவது அரசின் பொறுப்பு.
இத்தகைய நிலையில், சில காட்சிகளின் சிறு பகுதிகளின் அடிப்படையிலும் திரைப்படத்தைப் பாா்க்காமலும் தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்கும்போது வழிகாட்டுதலை கவனத்தில் கொள்ளவில்லை என்று தனிநீதிபதி உத்தரவில் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல.
இதன் அடிப்படையில், திரைப்படத்தை வெளியிடத் தடைவிதித்து வியாழக்கிழமை (பிப்.26) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குத் தடை விதிக்கிறோம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerala HC reserves verdict on appeal against its single judge order staying release of 'The Kerala Story 2' film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.