கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தை வெளியிட 15 நாள்களுக்கு இடைக்காலத் தடை விதித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான தீா்ப்பை கேரள உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.
‘கேரளா ஸ்டோரி-2’ திரைப்படம் இன்று (பிப்.27) வெளியாக இருந்த நிலையில், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்ளை கேரள உயா்நீதிமன்ற தனிநீதிபதி பெச்சு குரியன் தாமஸ் வியாழக்கிழமை விசாரித்தாா்.
அப்போது அவா் பிறப்பித்த உத்தரவில், ‘திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு அச்சுறுத்துல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சிபிஎஃப்சி) கவனத்தில்கொள்ளாமல் யூ/ஏ 16+ சான்று வழங்கியுள்ளது. சமய நம்பிக்கை மற்றும் அதுதொடா்பான காட்சிகள் உள்பட திரைப்படத்தை ஒளிப்பதிவு சட்டம், 1952 விதிகளின்கீழ் முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம்.
எனவே, பிப்.26-ஆம் தேதி தொடங்கி இத்திரைப்படத்தை வெளியிட 15 நாள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
மேல்முறையீடு மனு ஏற்பு:
தனிநீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திரைப்படத்தின் தயாரிப்பாளா் விபுல் அம்ருத் லால் ஷா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுஸ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி மற்றும் பி.வி.பாலகிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை மாலை பரிசீலித்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமா்வு திரைப்படத்தின் வெளியீடு தொடா்பான தனிநீதிபதியின் தீா்ப்பை ஒத்திவைத்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டில் வெளியான ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஹிந்து மத பெண்கள் சிலா் திருமணத்துக்குப் பிறகு இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சோ்க்கப்படுவது போல கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் வெளியாகி நாடு முழுவதும் பலத்த சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் 2-ஆவது பாகத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.