FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகை ரம்யா கிருஷ்ணனின் இந்தப் புன்னகை உங்களை கொன்றுவிடும்! சொன்னவர் யார்?

ரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15 பிறந்த ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே திரைப் பயணத்தைத் தொடங்கினார்.

Updated On : 18 பிப்ரவரி 2018, 3:47 pm IST
பகிர்:

ரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15 பிறந்த ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே திரைப் பயணத்தைத் தொடங்கினார். 1983-ம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திராவுடன் நடித்தார். மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், மலேஷியா வாசுதேவன், பாண்டியன், ஆகியோருடன் நடித்த முதல் வசந்தம் எனும் படத்தில் நடிக்கும் போது அவருக்கு 17 வயதுதான் ஆகியிருந்தது. அந்தப் படத்தில் நடிக்கும் போது ரம்யா முதல் மாடியிலிருந்து கீழே விழுந்து காலில் பலத்த அடி பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடம் 3 அறுவை சிகிச்சைகள் செய்தபின்னர் அவர் கால் குணமானது.

முதல் வசந்தம் படத்தில் ‘ஆறும் அது ஆழம் இல்லை அது சேரும் கடலும் ஆழமில்லை, ஆழம் எது அய்யா, அந்த பொம்பளை மனசு தான்யா’ என்று இளையராஜாவின் குரலில் வரும் பாடலில் நடிக்கும்போது கடுமையான கால் வலியால் சிரமப்பட்டார். அதைத் தாங்கி நடித்தார். போலவே, அதே வருடம் நாகார்ஜுனாவுடன் நடித்த சங்கீர்த்தனா என்ற தெலுங்குப் படம் பெரும் வெற்றி அடைந்தது. அந்த ஆண்டு ரம்யா கிருஷ்ணனின் திரைவாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டானது அவ்வகையில்தான்.

தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாகத் திரைத் துறையில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பிறகு, நீண்ட காலம் தொடர்ச்சியாகக் கதாநாயகியாக நடித்த, நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மட்டுமே. 

Advertisement

Advertisement

கோலிவுட்டை விட அதிகமாக டோலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரம்யா, 1995-ம் ஆண்டு அம்மன் என்ற படத்தில் நடித்த பிறகு தமிழில் நடிக்கவில்லை.

1999-ம் ஆண்டு வெளியான படையப்பாவில் ரீ எண்ட்ரி கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கே சவால் விடும் வகையில் 'நீலாம்பரியாக' நடித்து அசத்தினார். அண்மையில் வெளிவந்த பாகுபலியில் சிவகாமியாக நடித்து ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார் ரம்யா. 

தமிழ் சினிமா வரலாற்றில், ஹீரோவுக்கு இணையாக, ஒரு நடிகைக்கு நடிக்க வாய்ப்பும் புகழும் கிடைத்தது ரம்யா கிருஷ்ணனுக்குத்தான். 

தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்யா. இத்தம்பதியருக்கு ரித்விக் என்ற மகன் உள்ளான். 

தோற்றத்தில் மட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணனின் குரலும் மயக்கும் வசீகரமுடையது. தமிழ் மட்டுமல்லாமல் தான் நடிக்கும் மற்ற மொழிகளிலும் சொந்தக் குரலில் பேசும் பழக்கமுடையவர்.

இப்படிப் பன்முகத் திறமை கொண்ட ரம்யா கிருஷ்ணன் சின்னத் திரையிலும் கால் பதித்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்க வேட்டை எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் நெடுந் தொடர்களான 'கலசம்', 'வம்சம்' ஆகிய தொடர்களைத் தயாரித்து நடித்தார்.

ரம்யாவின் புகைப்படங்களையும் விடியோக்களையும் பார்த்தால் அவருக்கு 47 வயது என்று எளிதில் நம்ப முடியாது. 'மேடம், இவ்வளவு அழகா இளமையா அப்படியே இருக்கீங்களே' என்று ஒரு தொகுப்பாளினி அண்மையில் ஒளிபரப்பாகிய தொலைக்காட்சி நேர்காணலில் ரம்யா கிருஷ்ணனின் கேட்க, அதற்கு அவர் புன்னகையுடன் எனக்கே தெரியலை. நிச்சயம் அது கடவுளின் ஆசிர்வாதம் என்று பதில் சொன்னார். 

கோலிவுட், பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அனைத்து வுட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் ரம்யா கிருஷ்ணனின் தீவிர விசிறியான ப்ரத்யாஷா கோஷ் எனும் வங்காளப் பெண் ரம்யாவின் அழகான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் போட்டு இந்த புன்னகைக்காக சாகலாம் என்று பதிவிட்டிருக்கிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments