முகப்பு
செய்திகள்

ஆண்குழந்தைகளும் பாலியல் வன்முறை குறித்துப் பேச வெட்கப்படத்தான் செய்கிறார்கள்: சொல்கிறார் பிரபல மாடல்!

இந்த உலகில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளைப் போலவே ஆண்கள் மற்றும் ஆண்குழந்தைகளுக்கு எதிராகவும் வெளியில் தெரியாத அளவுக்கு அதிகமாக பாலியல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.

Updated On : 12 மே 2018, 11:25 am IST
பகிர்:

பாலிவுட்டின் பிரபல மாடல் காலித் சித்திக். இவரை தமிழிலும் கூட காட்பரீஸ் பெர்க், ஜில்லட் ஷேவிங் ரேஸர், பாம்பே டையிங் உள்ளிட்ட சில விளம்பரங்களில் நீங்கள் கண்டிருக்கலாம். காலித் சித்திக் சமீபத்தில் இணையத்தில் பரபரப்பை உண்டாக்கிய #metoo ஹேஷ் டேக் போலவே ஆண்கள் மற்றும் ஆண்குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வைத் தூண்டக்கூடிய விதத்தில் உருவாகவிருக்கும்  "#MeTooMainBhi" எனும் இந்தித் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உலகில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளைப் போலவே ஆண்கள் மற்றும் ஆண்குழந்தைகளுக்கு எதிராகவும் வெளியில் தெரியாத அளவுக்கு அதிகமாக பாலியல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. பெண்களைப் போலவே ஆண்களும், ஆண் குழந்தைகளும் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் சொல்ல வெட்கப்படுகிறார்கள். யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத அந்த ரகசியங்களை குழந்தைப் பருவம் முதலே மனதில் ஒழித்து வைத்து தீவிரமான மன உளைச்சலில் சிக்கிக் கொண்டு உழல்கிறார்கள். அவர்களைப் போன்றோர் அத்தகைய உளவியல் சிக்கல்களில் இருந்து மீள வேண்டும். ஆண்களுக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்குற்றங்களும் பெண்களின் #metoo ஹேச்டேக் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மற்றும் பதிவுகள் போல துணிந்து வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதே இத்திரைப்படத்தின் நோக்கம் என காலித் தனது ஆங்கில ஊடக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

#MeTooMainBhi திரைப்படத்தில் இளம் பருவத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களுள் ஒருவராக தான் நடிக்கவிருப்பதாகவும், இத்திரைப்படத்தில் குழந்தைப் பருவத்தில் தனக்கு நேர்ந்த பாதிப்பால் அந்தச் சிறுவன் கதாபாத்திரம் வளர்ந்து பெரியவனாகும் போது சிரிக்க மறந்து மனித இயந்திரம் போலாகி விடுகிறது. சிறுவன் வளர்ந்து பெரியவனாகி சிரிக்க மறந்தவனாகி தனது குழந்தைப் பருவத்தில் தனக்கு நேர்ந்த அவலத்தை எண்ணி மறுகும் வேடம் எனக்கு. இயல்பில் எப்போதும் புன்னகை முகத்துடன் இருக்கும் நான் இது போன்றதொரு கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகுந்த வித்யாசமாக இருந்தது. 

Advertisement

Advertisement

பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து பொதுவாக இருக்கும் விழிப்புணர்வைக் காட்டிலும் ஆண்கள் மற்றும் ஆண்குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு குறைவே. அதைப்பற்றிய பரவலான விமர்சனங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தற்போது மக்களிடையே தோன்றியிருக்கும் நிலையில் திரைப்படங்கள் வாயிலாக அதை இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்யும் போது அதன் மீதான பாதிப்புகள் குறைய வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. இவ்வுலகில் நடந்து கொண்டிருக்கும் அவலங்களில் இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறது. பெரும்பாலானோர் இதைப் பற்றி பேசவோ, விவாதிக்கவோ தயங்குகின்றனர். இந்த மனத்தடையை உடைப்பதே இத்திரைப்படத்தின் நோக்கம் என்று கூறுகிறார் பிரபல மாடலும் இந்தி நடிகருமான காலித் சித்திக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments