பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நபராக நடிகை ரேகா வெளியேறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது.
முதல் நாளில் ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்தார்கள். கடந்த வாரம் பிரப தொகுப்பாளர் அர்ச்சனா புதிய போட்டியாளராக நுழைந்தார்.
கடந்த வாரம், வெளியேறுபவர்களின் பட்டியலில் ரம்யா பாண்டியன், ஆஜித், கேப்ரியல்லா, ரேகா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன் என ஏழு பேர் இருந்தார்கள். அவர்களில் மக்களின் குறைவான வாக்குகள் நடிகைகள் ரேகா, சனம் ஷெட்டிக்குக் கிடைத்தன. மிகவும் குறைந்த வாக்குகளைப் பெற்ற மூத்த நடிகை ரேகா, இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டுள்ளார்.