முகப்பு
செய்திகள்

நீட் காரணமாக எனது வீட்டிலேயே தற்கொலை நிகழ்ந்திருக்கிறது: நடிகை சாய் பல்லவி உருக்கம்

நீட் காரணமாக தனது உறவினர் தற்கொலை செய்துகொண்டதாக நடிகை சாய் பல்லவி உருக்கமாக தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

நீட் காரணமாக தனது உறவினர் தற்கொலை செய்துகொண்டதாக நடிகை சாய் பல்லவி உருக்கமாக தெரிவித்துள்ளார். 

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். 

இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு சாய் பல்லவி பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, 'மருத்துவம் என்பது கடல் போன்றது. இதில் தேர்வின்போது எதில் இருந்து கேள்விகள் வரும் என்று சொல்ல முடியாது. அதனால் மனதளவில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். பெற்றோர்களும், நண்பர்களும் தான் மாணவர்களுடன் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும். 

என் உறவினர் ஒருவரும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டதால் தற்கொலை செய்துகொண்டார். இத்தனைக்கும் அவர் மோசமான மதிப்பெண் எடுக்கவில்லை. ஆனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதன் காரணமாக அத்தகைய முடிவை அவர் எடுத்திருக்கிறார். 

தற்கொலை செய்துகொள்வது உங்களது குடும்பத்தை ஏமாற்றும் செயல். தற்கொலை செய்துகொள்ளாதீர்கள் என எளிதாக என்னால் பேசி விட முடியும். ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அந்த வலி தெரியும். பதினெட்டு வயது கூட ஆகாத மாணவர்கள் இவ்வளவு இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது வேதனை அளிக்கிறது. மாணவர்களின் வலியை உணர்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.