இந்திய சினிமாவை பாலிவுட், டோலிவுட் எனப் பிரித்து பேசாதீர்களென பிரபல ஹிந்தி இயக்குநர் கரன் ஜோகர் கருத்து தெரிவித்துள்ளார்.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரா ( தமிழில் பிரம்மாஸ்திரம் ) வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்துகொண்டுவருகின்றனர்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாஸ்திரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பிரபல ஹிந்தி சினிமா இயக்குநர் கரன் ஜோகர் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் நமது படங்களை கொண்டு செல்ல நாங்கள் முயற்சித்து வருகிறோம். எஸ்.எஸ். ராஜமௌலி சார் கூறியது போல இது இந்திய சினிமா. இதை வேறெந்த பிரிவுகளிலும் குறிப்பிடாதீர்கள். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என நாம் பல ‘வுட்’களை வழங்கி வருகிறோம். இனிமேல் தெலுங்கு சினிமா, ஹிந்தி சினிமா என எதுமில்லை. நாமெல்லாம் இந்திய சினிமாவின் ஒரு அங்கம் என்பதை பெருமையுடன் சொல்வோம். இனி ஒவ்வொரு சினிமாவும் இந்திய சினிமாவே.