என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை: எதிர்நீச்சல் இயக்குநர் வேதனை!
இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் மரணத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் உருக்கமாக பேசியுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து இன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 57.
இன்று காலை, டப்பிங் பணியை மேற்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே, அவரே காரை ஓட்டிக்கொண்டு வடபழனியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தமிழில், கொம்பன். பரியேறும் பெருமாள் படத்தில் நாயகியின் தந்தை என 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
குறிப்பாக, எதிர்நீச்சல் என்ற நெடுந்தொடரில் நடித்ததன் மூலம், மக்களிடையே மிகவும் பிரபலமடைந்திருந்தார் மாரிமுத்து. இவர் பேசும் வசனங்கள் மீம்களாக மாறி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது.
இதையும் படிக்க.. 'ஏதோ கெட்டது நடக்கப்போகுது'.. மாரிமுத்து பேசிய வசனமும் மரணமும்
அவரது மறைவையொட்டி பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம், “எங்களால் இதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டப்பிங் பணிகள் முடிந்ததும் படப்பிடிப்புக்கு வருவதாகச் சொன்னார். உடல்நிலை சரியில்லாமல் எதாவது நடந்திருந்தால் அது வேறு. நன்றாக இருந்தவருக்கு இந்த நிலைமை. எதிர்நீச்சல் குழுவினர்கள், நடிகர்கள், ரசிகர்கள் எல்லாருக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சி. இதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியவில்லை” என மிகவும் வேதனையாகக் கூறியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில், ஆதி குணசேகரன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாரிமுத்து. அவரது இயல்பான நடிப்பினால், வில்லன் கதாபாத்திரத்தைக் கூட மக்கள் ரசிக்கும்படியாகச் செய்தவர். இந்த தொடரைப் பார்க்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மாரிமுத்துவின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மறைந்த மாரிமுத்துவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பசுமலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.